தமிழகத்தில் நடிகர் தனுஷின் நற்பணி மன்றங்களை வலுப்படுத்தும் பணிகள் தற்போது வேகமெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களைப் பலப்படுத்தி, புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்னும் வரும் நாட்களில் பெருமளவில் உறுப்பினர்களை இணைத்து, நற்பணி மன்றங்களின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், இந்த நற்பணி மன்றங்கள் மூலமாக பல்வேறு சமூக நலப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்வது, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வது என சமூக சேவைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், தனுஷின் நற்பணி மன்றங்கள் தற்போது வெறும் ரசிகர் அமைப்பாக இல்லாமல், மாவட்டம், தொகுதி என ஒரு கட்டமைப்புடன் செயல்படும் வகையில் மாற்றப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதற்கிடையேதான் அரசியல் தொடர்பான பேச்சுகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் வலுப்படுத்தி, பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வந்தார். பின்னர் அந்த அமைப்பே அரசியல் கட்சிக்கான அடித்தளமாகவும் அமைந்தது. அதேபோன்ற ஒரு பாணியை நடிகர் தனுஷும் பின்பற்றுகிறாரா என்ற பேச்சுகள் தற்போது எழுந்துள்ளன.
குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனுஷ் தனது மக்கள் செல்வாக்கையும், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து, எதிர்காலத்தில் அரசியல் களத்தில் இறங்குவதற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகிறாரா என்ற கேள்வி விவாதமாகியுள்ளது.
அதேநேரத்தில், மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்திலும், கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், தனுஷின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? இந்த நற்பணி மன்றக் கட்டமைப்பு எதிர்காலத்தில் அரசியல் அமைப்பாக மாறுமா? அல்லது சமூக சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்தப் பணிகள் தொடருமா? என்பதுதான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.

