கருணை மனுக்களை நிராகரித்து அரசாணை வெளியிட்ட கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.! 7 பேர் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம்.!

0
Follow on Google News

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கலசப்பாக்கம் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் 7 பேர் விடுதலை தொடர்பாக பேசினார்.அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளித்து பேசியதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,வி. ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி.சுதந்திர ராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நபர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்களின் முன் விடுதலை பற்றி, ஏற்கனவே 9.7.2019 அன்று இந்த அவையில் ஒரு தெளிவான விளக்கத்தை நான் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கி வருவதாலும், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்து வருவதாலும், ஒரு தெளிவான விளக்கத்தினை இந்த அவை முன் வைக்க விரும்புகிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களில் 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 28.1.1998 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளில், 11.5.1999 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 1987-ம் ஆண்டு ‘தடா’ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, 26 நபர்கள் மீதான தண்டனையை ரத்து செய்து, இதர சட்டங்களின் கீழ், கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

நளினி, ஸ்ரீ ஹரன் என்கிற முருகன், சாந்தன் என்கிற சுதந்திரராஜன், அறிவு என்கிற பேரறிவாளன், மேலும், கீழ்க்கண்ட 3 நபர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்தது. ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவி என்கிற ரவிச்சந்திரன். மேலும், இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற இதர 19 நபர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நபர்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் 8.10.1999 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, இந்த நான்கு நபர்கள், தமிழ்நாடு ஆளுநருக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். இம்மனுக்கள், ஆளுநரால் 27.10.1999ல் நிராகரிக்கப்பட்டன.

இதனை எதிர்த்து, இவர்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தனது 25.11.1999 நாளிட்ட தீர்ப்பில், இந்த மனுக்கள், சட்டப்படியான மாநில அமைச்சரவையின் ஆலோசனையில்லாமல் ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இவர்களின் கருணை மனுக்களின் மீது அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதியதாக முடிவு எடுக்கும்படி நெறியாணைகள் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இவர்களின் கருணை மனுக்கள் குறித்த பொருள் 19.4.2000 அன்று மாலை 4.30 மணிக்கு நடந்த திமுக அரசின், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த அன்றைய கூட்டத்தில் 24 திமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.இந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை முதலில் நிராகரித்ததை, பின்வருமாறு திமுக அரசின் அமைச்சரவை கூட்டம் முடிவு எடுத்தது. “தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.”

அதன்படி, நளினியின் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை குறைக்க கோரும் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் அமைச்சரவை அன்று முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இக்கருணை மனுக்களை நிராகரித்து 24.4.2000 அன்று அரசாணைகள் திமுக அரசால் வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வி.ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி.சுதந்திர ராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய மூவரும் 26.4.2000 அன்று குடியரசுத்தலைவருக்கு தங்களின் கருணை மனுக்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72-ன் கீழ் அளித்திருந்தனர். இம்மனுக்கள், 12.8.2011 அன்று, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், தாயுள்ளம் கொண்ட அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு, மேற்சொன்ன ஏழு பேர் விடுதலை தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கிலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்கு வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்ததின் அடிப்படையில் “தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் சுதந்திர ராஜா என்ற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மேதகு குடியரசுத் தலைவரை இந்த சட்டமன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”

என்ற தீர்மானத்தை சட்டமன்ற பேரவையில் 29.8.2011 அன்று அம்மா அவர்கள் முன்மொழிந்து, அத்தீர்மானம் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு இதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பொழுது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவும், இத்தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு எந்த அழுத்தம் கொடுக்கவில்லை.

குடியரசு தலைவரின் நிராகரிப்பு ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், பின்பு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, இவ்வழக்கின் மனுதாரர்களான வி.ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி.சுதந்திர ராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகியோர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தும், இத்தண்டனையை தங்களது இறுதி மூச்சு வரை அனுபவிக்க வேண்டும் எனவும், எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 கீழான Remission-க்கு,இப்பிரிவின், இதர நடைமுறைகளை பின்பற்றுவதற்கு உட்பட்டு இவர்கள் தகுதி பெறுகின்றனர் என்றும் குறிப்பிட்டு 18.2.2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர், பேரறிவாளவன் தாயார் அற்புதம்மாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்து, சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன் மகன் பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். அந்த தாயின் உணர்விற்கு மதிப்பளிக்கும் வகையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை முன்விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை சட்டமன்ற பேரவையில் விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் 19.2.2014 அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, 19.2.2014 அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற இந்த ஏழுபேரும், சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால், அவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 432-ன் கீழ் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்நிகழ்வில், இவர்கள் மீதான குற்ற வழக்குகளை மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஜ. விசாரணை செய்த காரணத்தால், மேற்காணும் சட்டத்தின் பிரிவு 435-ன் கீழ் 19.2.2014 நாளிட்ட மாநில அரசின் கடிதம் மூலம் மத்திய அரசின் கருத்தினை மூன்று நாட்களுக்குள் வழங்க கோரப்பட்டது. ஆனால், மாநில அரசின் மேற்காணும் முடிவை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 48/2014 என்கிற ஒரு வழக்கை தொடுத்தது. அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், அந்த அரசுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரவளித்த திமுகவும் நினைத்திருந்தால், மாநில அரசின் முடிவிற்கு எதிராக வழக்குத் தொடுக்காமல், இவர்களின் முன்விடுதலைக்கு அச்சமயத்திலாவது உதவியிருக்கலாம்.

இவ்வழக்கில், உச்சநீதிமன்ற அமர்வு 2.12.2015 அன்று வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், இவ்வழக்கின் பொருள் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 வினாக்களின் மீது பல தெளிவுரைகளை வழங்கி, அதில் ஒரு வினாவான குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 435(1)ல் குறிப்பிட்டுள்ள Consultation என்கிற பதம் Concurrence என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. உச்சநீதிமன்றம் அளித்த தெளிவுரைகளின் அடிப்படையில், பேரறிவாளன் உட்பட்ட ஏழு நபர்களும் தங்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பல்வேறு நாட்களில் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், அவர்களின் முன்விடுதலை குறித்து மேற்காணும் சட்டத்தின் பிரிவு 435ன் கீழ் மத்திய அரசின் கருத்தினை கோரி, அம்மாவின் அரசால் 2.3.2016 அன்று மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது.

இக்கடிதத்தினை தொடர்ந்து, இப்பொருள் மீது மத்திய அரசின் கருத்து வழங்கப்படாமல் இருந்த காரணத்தால், அம்மாவின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக 23.1.2018-ல் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் அளித்த தனது இடைக்கால தீர்ப்பில், இவ்வழக்கினை நிலுவையில் வைக்க ஆணையிட்டு, தமிழ்நாடு அரசின் 2.3.2016 நாளிட்ட கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு நெறியாணைகளை பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தனது 9.2.2018 மற்றும் 14.3.2018 நாளிட்ட கடிதங்கள் மூலம் தமிழ்நாடு அரசிடம் மேற்கண்ட நபர்கள் தொடர்பான சில ஆவணங்களை கோரியது. அந்த ஆவணங்கள் 27.3.2018 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஆராய்ந்த பின், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 18.4.2018 நாளிட்ட கடிதத்தில், தமிழ்நாடு அரசு 7 பேரின் முன் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவிற்கு, ஒப்புதல் அளிக்க இயலாது என்று தெரிவித்தது. இந்நிலையில், மேற்காணும் வழக்கு, 6.9.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் 18.4.2018 நாளிட்ட கடிதத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் கீழ்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.