நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு தமிழக அரசியலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்கிற பெரும்பான்மை இல்லாத நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறது தவெக,இருந்தும் போதிய ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள் தவெகவினர்.
இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்து இருக்கிறது அதிமுக, ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் , அல்லது எதிர்கட்சியாக இருக்க வேண்டும் இது இரண்டும் இல்லை என்றால் அடுத்த தேர்தலில் இன்னும் பலவீனமாகி காங்கிரஸ் போன்று கரைந்து போகும் சூழலில் தான் தற்பொழுது அதிமுக நிலைமை இருக்கிறது.
இப்படி ஒரு சூழலில் கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக வைத்திருந்த அதிமுக தற்பொழுது கொங்கு மண்டலத்தில் பலத்த அடியை பெற்று இருக்கிறது. மேலும் தென் மாவட்டத்தில் மிக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது அதிமுக. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 60 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக இம்முறை வெறும் 47 தொகுதிகளை மட்டுமே பெற்று இருக்கிறது, அதுவும் கூட முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் ஆதிக்கம் செலுத்தும் வடமாவட்டத்தில் தான்.
இப்படி ஒரு சூழலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்களை நகர்த்த தொடங்கி இருக்கிறார் சி வி சண்முகம். அதாவது தவெக வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் எஸ் பி வேலுமணியுடன் சென்று சந்தித்த சி வி சண்முகம், ஆளும் கட்சியும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை, இப்படி ஒரு சூழலில் ஆட்சியில் பங்கு கேட்டு தவெக வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என் சி வி சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து இருக்கிறார்.
குறிப்பாக தற்பொழுது அதிமுக கைவசம் இருக்கும் 47 சட்டமன்ற உறுப்பினர்களில், சுமார் 30க்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சி வி சண்முகம் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், மேலும் சிவி சண்முகம் பின்னனியில் முழு ஆதரவை வழங்கி பின்னின்று செயல்பட்டு வருகிறார் எஸ் பி வேலுமணி என்கிறது அரசியல் வட்டாரங்கள். இப்படி ஒரு சூழலில் தன்னுடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரியில் தங்க வைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் சி வி சண்முகம்.
அதிமுக கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியை வெளியேற்றுவது தான் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணியின் திட்டம் என்கிறது அரசியல் வட்டாரங்கள். இப்படி ஒரு சூழலில் எஸ் பி வேலுமணி அல்லது சிவி சண்முகம் இருவரில் ஒருவருக்கும் துணை முதல்வர் மற்றும் இதர அமைச்சர் பதவிகளை பெற்று கொண்டு தவெக வுக்கு ஆதரவு அளிப்பது அல்லது தவெக அதிமுக தயவு இல்லாமல் ஆட்சி அமைத்தால் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சி வி சண்முகம் நியமிக்கபட வேண்டும் என்பதே சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணியின் திட்டம் என கூறப்படுகிறது.
எதற்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவதால் பெரும்பான்மையான தங்கள் பக்கம் இருக்கும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் துணையுடன் அதிமுக கட்சியை கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி வெளியேற்ற படுவதற்கான வேலையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தன் பக்கம் கே பி முனுசாமி போன்ற ஒரு சிலர் தவிர்த்து ஆதரவின்றி தவித்து வருகிறார் எடப்பாடி என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

