இதுவரை 3 வாரங்களில் மொத்தம் 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் இயக்குனர் பிரவீன் காந்தி திருநங்கை அப்சரா மற்றும் ஆதிரை ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே யோகா ஆசிரியை நந்தினி என்பவர் தானாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று அவராகவே வெளியேறி விட்டார்.
இந்நிலையில் இப்போது 4வது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வழக்கமான பிக்பாஸ் சீசன்களை காட்டிலும் இந்த முறை 9வது சீசனில் பல்வேறு கோளாறுகளும் குளறுபடிகளும் போட்டியாளர்கள் மத்தியில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் பெரிய அளவில் பிக்பாஸ் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. சிறுபிள்ளைத்தனமாக மிக மோசமாக பேசி நடந்துக்கொள்ளும் சில போட்டியாளர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.

இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான 2வது பிரமோவில் திவாகருடன் பார்வதி பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர் சொல்லியிருக்கும் ஒரு தகவல் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சக போட்டியாளர் கம்ருதீன் மீது அவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
இந்த வாரத்தில் டாஸ்க் ஆக போட்டியாளர்களின் துணிகள் முதல் அவர்களுடைய ஆபரணங்கள் என எல்லாவற்றையும் பிக்பாஸ் அணியினரால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதை அவர்கள் மீண்டும் பெறவேண்டும் என்றால், கொடுக்கப்படும் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற வேண்டும். அதனால் அவர்களுடைய உடைமைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு யூனிஃபார்ம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்த போட்டி நேற்று இரவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் 2வது நாளுக்கான 2வது பிரமோ வெளியிடப்பட்டது. அதில் திவாகருடன் விஜே பார்வதி லானில் உள்ள சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, கம்ருதீன் ஒரு வேலையை செய்து விட்டான். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை டேட் செய்வது போல் அவன் நடந்து கொள்கிறான். அவனுடைய தொடுதல் எனக்கு தப்பாக தெரிகிறது.
நான் டேட்டிங் செய்தால் அதற்கான வரைமுறைகளை வகுத்துக் கொள்வேன். இவனுடைய விஷயம் சரியாக இல்லை. அவன் எனக்கு தோழன். நான் அவனுக்கு தோழி என்ற கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கம்ருதீனிடம் கூறிவிட்டதாக விஜே பாரு திவாகரிடம் தெரிவிக்கிறார். இப்போது இந்த பிரமோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக பார்வதிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது கம்ருதீன் தான்.
ஆனால் அவரை பற்றி இப்படி திடீரென விஜே பார்வதி குற்றச்சாட்டு கூறி திவாகரிடம் பேசுவது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயம் கம்ருதீனிடம் சொல்லப்படுமா என்ற கேள்வியும் பார்வையாளர்களிடம் எழுந்திருக்கிறது. இதை உள்ளே வரும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் சொன்னால் தான் ஆட்டத்தில் சூடு பிடிக்கும். வார இறுதியில் வரும் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் இதுகுறித்து கேட்டால் கண்டிப்பாக ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு கூட இந்த விவகாரம் செல்லலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
