நான்கு பேர் கொண்ட கும்பலால் விதவை பெண் பாலியல் கொடுமை.. நாமக்கல்லில் நடந்த கொடூரம்..!

0
Follow on Google News

நாமக்கல் : மிக சமீபத்தில் விருதுநகர் பகுதியில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரால் தலித் பெண் ஒருவர் கூடுபாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவத்தின் வடு கூட ஆறாத நிலையில் மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்புணர்வு நடந்தேறியிருப்பது தமிழக மக்களை திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

நாமக்கல் பகுதியில் தனக்கு தெரிந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த விதவைப்பெண் நான்குபேர் கொண்ட கும்பலால் கடத்திச்செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நெஞ்சை உறையவைத்துள்ளது. இதுதொடர்பாக மூன்று பேரை போலீசார் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடமிருந்து நகை மற்றும் ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்தவர் ஷோபா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) வயது 30. இவரது கணவர் திருமணமான சிறிது காலத்திலேயே மரணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் மாமியார் வீட்டுக்கோ தனது பெற்றோர்வீட்டிற்கோ செல்லாமல் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 19 அன்று தனது ஆண் நண்பருடன் நாமக்கல் அருகேயுள்ள வீசாணம் ஏரிக்கு மாலை நேரம் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் நான்குபேர் கொண்ட கும்பல் அவர்களை நோக்கி வந்தது. அந்த கும்பலில் இருந்தவர்கள் ஷோபா மற்றும் அவரது நண்பரை தாக்கியுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறித்துள்ளனர். அதோடு நில்லாமல் அந்த ஆண் நண்பரை ஒரு மரத்தில் கட்டிபோட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த இளம்பெண்ணை மிரட்டி தூக்கிச்சென்று இரவு 11 மணிவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

அரைமயக்கத்தில் இருந்த பெண் மறுநாள் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளித்துள்ளார். அவரின் புகாரி அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை தினேஷ்குமார் (20), முரளி (21) மற்றும் நவீன் (21) ஆகியோரை கைதுசெய்துள்ளனர். இவர்களின் கூட்டாளியான வல்லரசு என்பவர் தப்பியோடிவிட்டதால் அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அடுத்தடுத்த கூட்டு வன்புணர்வு சம்பவங்கள் தமிழகத்தை திகிலில் ஆழ்த்தியுள்ளது.