சமீபத்தில் நடைபெற்ற கரூர் பொதுக்கூட்டத்தில், முதல்வர் விஜய், எந்தக் கட்சியின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், “பார்ட்டி ஃபண்ட்” என்ற சொல்லை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது சப்ளை செய்யும் ஆலைகளிடமிருந்து வசூல் நடைபெற்றதாகக் கூறினார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும், சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய சில வார்த்தைகள் வைரலாகப் பரவிய நிலையில், அதற்கு எதிராக திமுகவும் கடுமையாக பதிலளித்து வருகிறது. இதனால், இந்த விவகாரம் அரசியல் மோதலாகவே மாறியுள்ளது. ஆனால், இதை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டும் விட்டுவிடாமல், அதற்குப் பின்னால் இருக்கும் சட்டரீதியான நிலை என்ன என்பதை அறிய முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தியிருந்தன. குறிப்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது அப்போது மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தச் சோதனையின்போது அதிகாரிகளின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், பல்வேறு ஆவணங்கள், மின்னணு தகவல்கள் மற்றும் தொடர்புடைய பதிவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. தொடர்ந்து பல அதிகாரிகளிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதற்கிடையில், அந்த விசாரணைக்கு எதிராக அப்போதைய அரசு நீதிமன்றத்தை அணுகியது.
உயர்நீதிமன்றத்தில் அப்போதைய திமுக அரசுக்கு சாதகமான சூழல் உருவாகாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றது அப்போதைய திமுக அரசு, அதன் காரணமாக அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறாமல் முட்டுக்கட்டை போடப்பட்டது. இந்தச் சூழலில்தான், தற்போது அந்த இடைக்கால தடை உத்தரவின் தற்போதைய சட்டநிலை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அந்தத் தடையை நீக்க சட்டரீதியாக வாய்ப்பு உள்ளதா, அதற்கான நடைமுறைகள் என்ன என்பதையும் அரசு தரப்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி, தேவையானால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது பற்றியும் பரிசீலனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை அந்த இடைக்கால தடை நீக்கப்பட்டால், அமலாக்கத்துறை மீண்டும் தனது விசாரணையைத் தொடர வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.எனினும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் இறுதியாக வழங்கப்படவில்லை. மேலும், யார் மீதும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதால்,
இந்த விவகாரம் இனி சட்டரீதியாக எந்தத் திசையில் நகர்கிறது? அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றத்தில் என்ன நடக்க இருக்கிறது ? என்பதையே அரசியல் வட்டாரங்களும், பொதுமக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் கடந்து திமுக ஆட்சியில் நடைபெற்ற எதாவது ஒரு ஊழலை சட்ட ரீதியாக நிரூபித்து காட்ட வேண்டும் என மிக தீவிரமாக முதல்வர் விஜய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




