11 வயது சிறுமி முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. 17 வயது சிறுவன் கைது …

0
Follow on Google News

திருக்கழுக்குன்றம் அருகே மாயமான 11 வயது சிறுமி மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கணேசன். இவருக்கு 11 வயதில் மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி சென்றுள்ளார். மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரது பெற்றோர்களும் உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். அவர் எங்கும் கிடைக்காததால் சதுரங்கப்பட்டிணம் காவல்நிலையத்தில் சிறுமி காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களோடு சிறுமி மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், சிறுமி சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வெங்கம்பாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.