எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது…மக்களின் குமுறல்களுக்கெல்லாம் நான்காவது தலைமுறை தியாகராஜனின் பதில் என்ன?

0
Follow on Google News

காகிதப் பூ மணக்காது; வெற்று வெள்ளை அறிக்கை பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது, கொடுத்த வாக்குறுதியை காப்பற்றப் பாருங்கள்! இல்லையென்றால் இருக்கையை காலி செய்யுங்கள்!! என நேற்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி குறித்து பதிலளித்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, மேலும் அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்.

பெட்ரோல், டீசல் விலை நாடெங்கும் நாளொரு தினமும், பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்விலை உயர்வால் சாதாரண மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அனைத்து பொருட்களின் விலையேற்றமும் அதிகரிக்கிறது. தொழில் நிமிர்த்தமாக தினமும் பல கிலோமீட்டர் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் இவ்விலை உயர்வுகளால் குடும்பச் செலவினங்கள் அதிகரித்து கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5-ம், டீசல் லிட்டருக்கு ரூபாய் 4-ம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தே, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.

பதவிக்கு வந்து ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றக்கூடிய வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் மத்தியில் திமுக அரசின் மீது கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமே இல்லாத சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களுக்குக் கூடுதல் சுமையாக உள்ளது. திமுகவினர் தான் கடந்த ஐந்து வருடமாக ஆட்சிக்கு வருவதற்கு முன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மாநில வரிவிதிப்பைக் குறைத்தும், வரி விதிப்பை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதன் மூலமும் ஒரு லிட்டருக்கு ரூபாய் 25 முதல் 30 குறைக்க முடியும் என பிரச்சாரம் செய்தார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று விட்டது. ஆனால், அந்த இரண்டு கூட்டங்களிலும் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தமிழகத்தின் சார்பாக எவ்வித கோரிக்கையும் வைக்கப்பட இல்லை. மாறாக, பழனிவேல் தியாகராஜன் கடந்த 45 நாட்களாக திரும்பத் திரும்ப மத்திய அரசை மட்டுமே ”கிளிப்பிள்ளை போல” குறை சொல்வதையே குறியாகக் கொண்டு செயல்படுகிறார்.

”மாநில அரசின் வரி விதிப்பைக் குறைத்து; பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்” என்பது தானே திமுகவின் தேர்தல் வாக்குறுதி. அதை ஏன் நிறைவேற்றவில்லை? என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் கேள்வியாகும். அதுமட்டுமின்றி அவர் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது எல்லா பொறுப்புகளையும் மத்திய அரசின் மீது போட்டுவிட்டு மாநில அரசுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்பதை போலவும், மாநில அரசு எந்த வரிகளையும் விதிப்பதில்லை என்பதைப் போலவும் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.

அதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு ”தேதி போட்டிருந்தோமா?” என பத்திரிக்கையாளர்கள் மீது கோபத்தில் எரிந்து விழுகிறார். அப்படியென்றால் பெட்ரோல், டீசல் விலையை இப்போது அவர்கள் குறைக்க போவதில்லையா? அல்லது அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே அடுத்த தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக ரூபாய் 5-ஐ குறைத்து விட்டு ”பாருங்கள், பாருங்கள் நாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டோம்” என மக்களை மீண்டும் ஏமாற்றி ஒட்டு வாங்க காத்திருக்கிறார்களா?

”கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்; பெட்ரோல் டீசல் விலையைக் குறையுங்கள்” என்று மக்கள் கேட்டால் ஒவ்வொரு துறைக்கும் வெள்ளை அறிக்கை தயாராகிறது என கூறுகிறார். வெள்ளை அறிக்கை நகலைக் காண்பித்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வாங்கிக் கொள்ள முடியுமா?, குடும்பத் தலைவிகள் மாதம் ரூ 1000 பெற்றுக் கொள்ள முடியுமா? ஓய்வூதியம் ரூ 1000 லிருந்து ரூ 1500 ஆக உயர்த்தி பெற்றுக் கொள்ள முடியுமா?, வங்கிகளில் நகைக் கடன்களை இரத்துச் செய்ய முடியுமா? போன்ற மக்களின் குமுறல்களுக்கெல்லாம் நான்காவது தலைமுறை தியாகராஜனின் பதில் என்ன?

சிலரை பல காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. காகிதப் பூ மணக்காது; வெற்று வெள்ளை அறிக்கை பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காது. கொடுத்த வாக்குறுதியை காப்பற்றப் பாருங்கள்! இல்லையென்றால் இருக்கையை காலி செய்யுங்கள்! என புதிய தமிழகம் கட்சி.நிறுவன தலைவர். டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.