இது போன்ற வன்முறை அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும்.!போராட்டக்காரர்களுக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை.!

0
Follow on Google News

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இன்று கலவரமாக வெடித்துள்ளது, போராட்டத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து உள்ளனர், ஒரு கட்டத்தில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நுழைந்த கலவரக்காரர்கள் காலிஸ்தான் கொடியை ஏற்றினர், இதனால் தலைநகரமே கலவரம் சூழல் உருவாகியுள்ளது, இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத் தான் பா.ஜ.க. அரசு நடத்தியதே தவிர ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை. இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு.

பிரதமர், விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஏன் தீர்வு காண முயற்சி செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள். வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை சூழுமானால் அது ஒன்றே அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகளும் உணர வேண்டும். ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்.

திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என்பதை நெருக்கடியான இந்த நேரத்தில் யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இனியும் பிரதமர் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்து அவரே பேச வேண்டும். விவசாயிகளால் நிராகரிக்கப்படும் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.