இந்திய சினிமாவில் இன்று பான் இந்தியா ஸ்டார் என்றால், அந்த பட்டியலில் முதல் வரிசையில் நிற்கும் நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். ஒரு காலத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே அறியப்பட்ட பிரபாஸ், தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், அவரது வாழ்க்கையையே மாற்றிய திரைப்படம் என்றால் அது “பாகுபலி” தான்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான “பாகுபலி” மற்றும் “பாகுபலி 2” திரைப்படங்கள் இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றின. உலகம் முழுவதும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் குவித்த அந்த இரண்டு படங்கள், பிரபாஸை நேரடியாக உலக அரங்கிற்கு கொண்டு சென்றன.குறிப்பாக “பாகுபலி 2” திரைப்படம் மட்டும் சுமார் 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக அவரை மாற்றியது.

அதன்பிறகு, தென்னிந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இரண்டு முறை தொட்ட ஒரே நடிகர் என்ற பெருமையையும் பிரபாஸ் பெற்றார்.சமீபத்தில் வெளியான “கல்கி 2898 AD” திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அவரது மார்க்கெட்டை மீண்டும் நிரூபித்தது. இதன் இரண்டாம் பாகமும் இன்னும் பெரிய சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.
இப்படி தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வரும் பிரபாஸ், தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ரசிகர்களிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது. “பாகுபலி” படப்பிடிப்பு நடைபெற்ற காலத்தில் நடிகை அனுஷ்காவும், பிரபாஸும் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகின.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்திகளும் பரவின. ஆனால், அந்த வதந்திகளை இருவரும் பலமுறை மறுத்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெளிவாக கூறியிருந்தனர். அதன்பிறகு கூட, பிரபாஸ் திருமணம் குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபரின் மகளை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதுமட்டுமல்ல… சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் மதிப்பில், மிகப் பிரம்மாண்டமான ஒரு சொகுசு மாளிகையையும் பிரபாஸ் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு அந்த புதிய வீட்டில்தான் குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், அவர் யாரை திருமணம் செய்யப் போகிறார்? உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா? அல்லது இன்னும் சில காலம் சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.திரையில் மன்னனாக வெற்றிகளை குவித்து வரும் பிரபாஸின் திருமணச் செய்தியை, அவரது ரசிகர்கள் மட்டும் இன்னும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

