இது போன்ற வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி.! திமுக அரசுக்கு புகழாரம் சூட்டிய ஜாக்கி வாசுதேவ்..

0
Follow on Google News

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இரண்டு தினகளுக்கு முன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. துறை அலுவலர்களுடன் நடத்திய ஆய்வில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.

அதில், திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிடுதல். திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன்
(Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்தல். திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிடுதல். (Publishing)

திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றுதல் (Uploading). திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து
செயல்படுதல். என சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இதை உடனே அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை பாராட்டும் விதத்தில் ஜாக்கி வாசு தேவ் தனது டிவீட்டர் பக்கத்தில், அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் – சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.