பா.ஜ.கவின் இந்த செயலை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்! முக ஸ்டாலின் ஆவேசம்.!

0
Follow on Google News

“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக விலக குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, அப்பதவிக்கு வேறொருவரை நியமிக்கும் மாற்று ஏற்பாடுகளை செய்யும்வரை அதை கூடுதல் பொறுப்பாக கவனிக்குமாறு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனை குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை 2016ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி முதல் கிரண் பேடி வகித்து வந்தார்.

வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அல்லது குடியரசு தலைவரின் மறு உத்தரவுவரை துணைநிலை ஆளுநரின் பதவிக்காலம் இருக்கும் வேளையில், ஐந்து ஆண்டு பதவிக்காலத்துக்கு முன்பாகவே கிரண் பேடி நீக்கப்பட்டிருக்கிறார். புதுச்சேரி மற்றும் தமிழக சட்டமன்றத்துக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், கிரண் பேடியின் திடீர் நீக்கமும், தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி ஒதுக்கப்பட்டிருப்பதும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் – ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் தடுத்து – ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி – அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம்.

புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை – இறுதிக் கட்ட முயற்சி! துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பா.ஜ.க. செய்த தரம் தாழ்ந்த அரசியலையும் – அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.