தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்கினார் முண்டாசு கவி பாரதி. இப்படி பாரதி சொன்ன வாக்கியத்திற்கு ஏற்ப ஜகத்தினை அல்ல வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என, திமுக அரசினால் பசியின் கொடுமையை அனுபவிக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
ஏழை எளிய மக்களுக்கு கல்வி வேண்டும் என்கிற நல்ல நோக்கத்திற்காக இதற்கு முன்பு முதல்வராக இருந்த காமராஜர், எம்ஜிஆர் போன்றோர், பள்ளிகளில் சத்துணவு திட்டம், அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு வசதி என பல திட்டங்களை கொண்டு வந்து ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி அறிவை கொடுத்தனர் காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள்.

ஆனால் தற்பொழுது திராவிடம் மாடல் ஆட்சியின் அவல நிலை மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து நாள்தோறும் திமுக ஆட்சியின் அவல நிலையை மக்கள் மத்தியில் பாஜக போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிச்சம் போட்டு காட்டி வந்தாலும், இதற்கு ஒரு எண்டே இல்லையா என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து திமுக ஆட்சியில் இதெல்லாம் பழகி போச்சு என்று சொல்லும் வகையில், தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் மனதை உருக்கும் வகையில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவளிக்க திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருப்பது மனதை பதைபதைக்க வைக்கிறது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்கப்படுதில்லை எனவும், விடுதி மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் திமுக அரசின் முகத்திரையை நமக்குத் தோலுரித்துக் காட்டுகிறது என தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
மேலும் தன் பிள்ளை ஒருவேளை உணவையாவது வயிறார உண்ணட்டும் என்ற ஆசையில் தான் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒருவேளை உணவைக் கூட கொடுக்க இயலாதவர்கள் அரசு மாணவர் விடுதிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ஆனால் திமுக அரசின் ஆட்சியில் பள்ளி சத்துணவில் புழு, பூச்சி, பல்லி மிதக்கிறது. அரசு விடுதிகளில் உணவு மறுக்கப்படுகிறது என்கிற வேதனையை பகிர்ந்த நயினார் நாகேந்திரன்.
மேலும் இப்படி எளிய பின்புலமுள்ள மாணவர்களின் உணவு விஷயத்தில் திமுக அரசு ஒரு மெத்தனப்போக்கைக் கடைபிடிப்பதன் பின்னணியில் ஆளும் வர்க்கத்தின் ஆணவம் ஒளிந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது என்றும், மேலும், குடியைக் கெடுக்கும் சாராயக்கடை வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி இயங்கும் பொழுது, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை மட்டும் எதற்காக வார இறுதி நாட்களில் மூட வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன்.
மேலும் திமுக ஆட்சியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளை, விடுதியில் இருந்து துரத்தினால் அவர்கள் எங்கு போவார்கள்? இதுதான் திமுகவின் எல்லோருக்குமான ஆட்சியா? வெற்று விளம்பரங்களிலும் பாராட்டு விழாக்களிலும் மதி மயங்கிக் கிடக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் , தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை எப்போதுதான் கவனிப்பார்? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தங்கும் விடுதியில் உணவு இல்லாமல் பசியின் கொடுமையை மாணவர்கள் அனுபவிக்க சூழலுக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள தகவலுக்கு பின்பு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் பொதுமக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் தான் தலைவன் என கொக்கரிக்கும் திருமாவளவன் எங்கே என பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.

