அமெரிக்காவுக்கு பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அண்மையில் அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு 50 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிவிதிப்பானது அமலுக்கு வந்துள்ளது.
இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில், இந்தியா BRICS நாடுகளுடன் முழுமையாக இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையையும் இந்தியா வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களின் மீது 50% வரி விதித்ததற்குப் பிறகு இந்த கொள்கை அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாயை வலுப்படுத்தும் இம்முயற்சி, அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசின் நேரடிப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
BRICS நாடுகளுடன் மட்டுமல்லாமல், இந்திய ரூபாயில் நேரடியாகப் பணம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும் சுற்றறிக்கையை இந்தியா பல நாடுகளுக்கும் அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் சர்வதேச வர்த்தக நிலையில் முக்கிய பங்காற்றுவதோடு, உலகச் சந்தைகளில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ரூபாயை அமெரிக்க டாலருக்கு போட்டியாகப் பயன்படுத்தும் நிலையில், மற்ற BRICS உறுப்பு நாடுகளும் சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. அதேசமயம் இந்தியா மீதான கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேச முயற்சித்துள்ளார்.
4 முறை அவர் முயற்சித்த நிலையில் தொலைபேசி அழைப்பை பிரதமர் மோடி ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனியை சேர்ந்த பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த சில வாரங்களில் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள டிரம்ப் 4 முறை முயற்சித்தார்.
ஆனால் டிரம்புடன் பேச மோடி மறுத்து விட்டார். இந்தியாவும், ரஷ்யாவும் இறந்த பொருளாதாரங்கள் என்று டிரம்ப் கூறினார். அவரது பேச்சு மோடிக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இது டிரம்ப் மீதான மோடியின் கோபத்தையும், அவர் கவனமாக செயல்படுவதையும் காட்டுகிறது.
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்பே டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக கூறினார். அந்த வலைக்குள் சிக்க மோடி விரும்பவில்லை. சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் பக்கம் நிற்க இந்தியா விரும்பவில்லை” என்று ஜெர்மனியை சேர்ந்த பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் பிரதமர் மோடியின் செயலை உலகமே வியப்புடன் பார்த்து வருவது குறிப்பிடதக்கது.

