சுற்றி வளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்..! ரத்த கரையுடன் இந்திராகாந்தி உயிர் தப்பியது எப்படி.?

0
Follow on Google News

பிரதமர் மோடி பஞ்சாப் சென்று அங்கே பாதுகாப்பு காரணமாக டெல்லி திருப்பிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ள சம்பவம் பற்றி தற்போது உள்ள தலைமுறையினர் பலருக்கு தெரிந்திக்காது அதுபற்றிய இந்திராகாந்தி தாக்குதலுக்கு உள்ளான போது உடன் இருந்த பழ.நெடுமாறன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது.

“1975ஆம் ஆண்டு அவசர நிலையை அமல்படுத்தினார் இந்திரா காந்தி. 1977ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். ஆனால் தென் இந்தியாவில் காங்கிரஸ் கணிசமான வெற்றிபெற்றது. அதே ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். அந்தக் காலக்கட்டம் காங்கிரசுக்குச் சோதனையான காலக்கட்டம். அவசர நிலை, அதிகார துஷ்பிரயோகங்கள், முறைகேடுகளுக்காக, விசாரணைக் கமிசன்கள், வழக்குகள் என்று இந்திரா காந்தி மீது போடப்பட்டன.

நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் பொதுச் செயலாளர். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்திரா மதுரைக்கு வருகை தந்தார். அவசர நிலை முறைகேடுகளுக்காக அவருக்குச் செல்லுமிடங்களிலெல்லாம் கறுப்புக்கொடி காட்டப் போவதாக தி.மு.க. அறிவித்தது. ஆனால் உண்மையான காரணம், இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதன் மூலம் பிரதமர் மொரார்ஜியை திருப்திப்படுத்தி சர்க்காரியா கமிசன் விசாரணை பின்விளைவுகளிலிருந்து தப்பிப்பதுதான்.

இந்திரா அன்று மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் பேசுவதாக இருந்தது. தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்ட மிக “பலமான’ ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நகரமே கொந்தளிப்பாக இருந்தது. விமான நிலையத்துக்கு இந்திராவை வரவேற்கப்போனபோதே, நான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். அவரை வரவேற்று திறந்த காரில் பின்சீட்டுக்குப் பின்னால் உள்ள இடைவெளியில் தலையணைகளைப் போட்டு, இந்திராவை அமர வைத்தோம்.

காரில் நான், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி. சுவாமிநாதன், சித்தன் ஆகியோர் இருந்தோம். வழியெங்கும் மக்களைப் பார்த்துக் கையாட்டிக்கொண்டே வந்தார் இந்திரா. கார், தெற்கு வெளி வீதிக்குள் திரும்பியது. திடீரென்று, நாங்கள் வைத்திருந்த வரவேற்பு வளைவு கீழே தள்ளப்பட்டது. கார் மேலே போக முடியாமல் நின்றது. கறுப்புக் கொடி (தடி)களுடன் திரண்டிருந்த தி.மு.க.வினர் இந்திராவைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள்.

ஆபத்தை உணர்ந்த நான் சில நொடிகளுக்குள் இந்திராவை பின்சீட்டில் படுக்க வைத்து அவர் மீது தலையணைகளை அமுக்கி, மேலே நான் படுத்துக் கொண்டேன். தடிகளுடன் பாய்ந்து வந்த தி.மு.க.வினர், தாக்கத் தொடங்கினர். தலையணைகளுக்கு அடியில் இருந்த இந்திரா மீது ஒரு அடி கூட விழாமல் அனைத்தையும் நான் வாங்கிக் கொண்டேன். காவல் துறையினர் கூட காப்பாற்ற நெருங்க முடியாத வகையில், தி.மு.க.வினர் காரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். பல நிமிடங்கள் என்மீது

தாக்குதல் நீடித்தது. முதலில் திகைத்துப்போன ஓட்டுநர் ஜான், அப்புறம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்த ஆபத்தான சூழலிலும், காரை நடைமேடை மீது ஏற்றி, தி.மு.க.வினருக்கு இடையில் காரை விரைவாகச் செலுத்தி, சம்பவ இடத்திலிருந்து, புத்திசாலித்தனமாக வெளியே வந்தார். ஆபத்தில்லாத இடத்துக்கு கார் வந்த பிறகு, “இந்திராவுக்கு என்ன ஆயிற்று?” என்று பார்க்க தலையணைகளை நீக்கி விட்டு அவரை எழுந்து உட்காரச் சொன்னேன். அவரது புடைவையில் ஒரே ரத்தம்.

இவ்வளவு பாதுகாப்புக் கொடுத்தும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்ற பதைபதைப்பு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால், இந்திராவுக்கு அடி எதுவும் படவில்லை. எனது தலையில்தான் பலத்த தாக்குதல் நடந்திருக்கிறது. அதிலிருந்து வழிந்த ரத்தமே இந்திராவின் புடைவையை நனைத்திருந்தது. எனக்கு அடிபட்டிருக்கிறது என்பதைப் பார்த்ததும் இந்திரா மிகவும் கவலைப்பட்டுப் போய்விட்டார். “ஆஸ்பத்திரிக்குப் போங்க’ என்று ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார்.

ஆனால் இந்திராவை வைத்துக்கொண்டு மேலும் தெருக்களில் பயணம் போவது ஆபத்து என்பதால், “நீ சர்க்கியூட் ஹவுஸ் போப்பா” என்று ஓட்டுநரிடம் கண்டிப்பாகச் சொன்னேன். இந்திராவை சர்க்கியூட் ஹவுசில் பத்திரமாகச் சேர்த்துவிட்டு மருத்துவமனைக்குப் போய் கட்டுப்போட்டுக்கொண்டு மீண்டும் அவரைச் சந்தித்து கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். “ஏன் ஓய்வு எடுக்கவில்லை” என்று அவர் என்னைக் கண்டித்தார்.

மதுரை கூட்டத்தை முடித்துவிட்டு, திருச்சிக்குப் போவதாகத் திட்டம். காரில் திருச்சிக்குப் புறப்பட்டோம். கொட்டாம்பட்டியில் காவல்துறை எங்களைத் தடுத்து நிறுத்தியது. “திருச்சியில் கலவரம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும், அங்கு போக வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டது. இந்திரா காவல்துறை ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் சென்றோம். அங்கிருந்து ரயிலில் சென்னை புறப்பட்டார் இந்திரா. ரயில் கிளம்ப இருந்தது. கதவருகில் உட்கார்ந்திருந்தார் இந்திரா. என்னைக் கூப்பிட்டார். கைகளைப் பிடித்துக்கொண்டார். “My son you have saved my life” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். அவர் கண்களில் கண்ணீர். என் நெஞ்சமும் கனத்துப்போனது. ஒரு சில விநாடிகளில் இந்திரா சுதாரித்துக்கொண்டு இதழோர புன்னகையுடன் விடைபெற்றுக்கொண்டார்.