விஜய் நல்லது செய்ய வரல… விஜய்க்கு அந்த மாதிரி வெறி இருக்கு… வெளுத்து விட்ட தேவயானி கணவர்…

0
Follow on Google News

எம்ஜிஆர் அரசியலுக்குள் வந்த போது அவருக்கு திரையுலகம் சார்ந்த பலர் வெளிப்படையான ஆதரவை தந்தனர். ஆனால் ஒரு சிலர் வெளிப்படையாக ஆதரவு தராவிட்டாலும் எம்ஜிஆர் குறித்து பகிரங்கமாக எதிர்விமர்சனம் செய்ய முன்வரவில்லை. எம்ஜிஆருடன் சுமூகமான ஒரு உறவை தொடரவே விரும்பினார்கள்.

ஆனால் நடிகர் விஜய்க்கு நிலமை அப்படியல்ல. ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்கள் திமுக ஆதரவாளர்களாக இருப்பதால் நிச்சயமாக விஜய்க்கு அவர்கள் எதிராளிகள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. தவிர யாருமே இதுவரைக்கும் விஜய் குறித்து அரசியலுக்கு வந்தால் வரட்டும் என பொதுவான கருத்தை தான் கூறியிருக்கிறார்களே தவிர, விஜயை ஆஹா ஓஹோ என புகழ்பாடி வரவேற்கவில்லை. சின்ன சின்ன நடிகர்கள் ஒரு சிலர் தான் விஜய்க்கு ஆதரவாக நிற்கின்றனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என்ற சவாலோடு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு மக்களிடம் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்த நிலையில் அது உண்மையாகி விடுமோ என்று மற்ற அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஒருவித கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் ஒரு கட்சியின் தலைவனாக மட்டுமின்றி மக்களின் தலைவனாக ஒருவர் மாறும்போது அதற்கேற்ப நிறைய பொறுப்புணர்வு அவருக்குள் இருக்க வேண்டும். அந்த தன்மைக்கு அவர் மாற வேண்டும். ஆனால் பல மணி நேரம் தனது ரசிகர் கூட்டத்தை மக்கள் கூட்டத்தை காத்திருக்க செய்கிறார் என்ற பலத்த குற்றச்சாட்டு விஜய் மீது சில வாரங்களாக எழுந்தது.

இந்த சூழலில் கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை நாட்டு மக்களுக்கு தந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோவில் ஒட்டுமொத்த பழியையும் திமுக மீது போட்டிருப்பது அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.

இந்த சூழலில் திரைப்பட இயக்குனர் இராஜகுமாரன் விஜய் குறித்து விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்த இராஜகுமாரன் பிறகு நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலுடன் போன்ற படங்களை இயக்கியவர். நடிகை தேவயானியின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் இராஜகுமாரன் கூறியதாவது, நான் மக்களுக்கு நல்லது பண்ணத்தான் அரசியலுக்கு வரேன்னு விஜய் சொன்னால் அதை நான் ஒத்துக்க மாட்டேன். 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குற அளவுக்கு இருக்கிற நீங்க அந்த பணத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு எவ்வளவோ நல்லது பண்ணலாம். வருஷத்துக்கு 2 படம் நடிச்சிட்டு 400 கோடி ரூபாய்ல 100 கோடி மட்டும் வச்சுக்கிட்டு 300 கோடி ரூபாய்க்கு மக்களுக்கு செலவு பண்ணலாம்.

ஒரு அரசாங்கத்தால் முடியாததை கூட நீங்க செய்யலாம். சினிமாவை நிச்சயம் விஜய் ஆள்கிறார். ஆனால் நாட்டையும் ஆளனும் அப்படீங்கற எண்ணமும் அவருக்கு இருக்கு. அரசியலுக்கு வந்தால் அதை சமாளிக்கவே நேரம் பத்தாது. அப்புறம் நீங்க எங்க நல்லது செய்வீங்க? எதுவுமே நடக்காது. மக்களுக்கு விஜய் நல்லது பண்ண வாய்ப்பே இல்லை என்று இயக்குனர் இராஜகுமாரன் அந்த நேர்காணலில் உறுதியாக கூறியிருக்கிறார். ஆக மொத்தம் விஜய் அரசியலுக்கு வருவதே நாட்டை ஆளும் ஆசையில்தான் என்பதை ஓபனாக அவர் கூறிவிட்டார்.