இதைச் செய்தாலே தமிழகத்திலிருந்து மொழி வெறியர்கள் விரட்டப்படுவார்கள்.!டெல்லியில் தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்த இயக்குனர் தங்கர் பச்சான்..

0
Follow on Google News

இயக்குனர் தங்கர் பச்சன் தன் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது. 1997ஆம் ஆண்டு “காதல் கோட்டை” திரைப்படத்தின் இந்தி பதிப்பின் படப்பிடிப்பு புதுதில்லியில் நடந்தது. அப்பொழுது தயாரிப்பாளரால் எனக்கு அளிக்கப்பட்ட காசோலையில் தமிழிலேயே என் பெயரை எழுதச் சொன்னேன். பின் அந்த காசோலையை புது தில்லியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வாங்க மறுத்த போது, நான் விடுவதாக இல்லை.

“இது இந்தியா! தமிழ் மாநிலத்தின் வரியில் இருந்தும் உங்களுக்கான ஊதியம் தரப்படுகிறது. பல மொழிகளை கடன்வாங்கி இந்தி மொழி என பெயரிட்டு கொண்ட ஒரு மொழியில் கையெழுத்திட்டால் அதை அனுமதிக்கும் நீங்கள், எந்த மொழியையும் கடன் வாங்காத செம்மொழி தமிழில் எழுதப்பட்ட இந்த காசோலையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என நான் கூறியபோது, அதற்கு அதன் மேலாளர் எங்களிடம் தமிழ் தெரிந்த ஊழியர் இல்லையே! என்ன செய்யமுடியும்” என பதிலுரைத்தார்.

“தமிழ்நாட்டில் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த ஊழியர்கள் பலர் பணியாற்றும் போது அதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்! ஆகவே உடனடியாக நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை பணியில் அமர்த்துவது கட்டாயம்” எனச்சொல்லி காசோலையை அவரிடமே தந்து வந்து விட்டேன்.பிறகு என்ன, ஒரு வார காலத்தில் அந்த காசோலை ஏற்றுக்கொள்ளப்பட்டு பணம் என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காசோலைகளில் தாய்மொழி தமிழிலேயே அனைத்து விவரங்களையும் எழுதுகிறேன். கவிஞர் வைரமுத்து அண்ணனுக்கு ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தில் பாடல் எழுதிய ஊதியத்தை காசோலையாகத் தந்த போது தமிழில் எழுதியிருந்ததைக்கண்டு வியந்ததோடு பாராட்டிக்கொண்டே இருந்தார். அன்றிலிருந்து ‘தானும் இனி தமிழிலேயே நிரப்பப் போகிறேன்’ என்றார்.

இதைச் செய்தாலே தமிழகத்தின் வங்கிகளிலிருந்து மொழி வெறியர்கள் விரட்டப்படுவார்கள். அந்த இடத்தில் தமிழர்களுக்கு பணி நிரப்பப்படும். அல்லது அவர்கள் தமிழைக்கற்றேத்தீர வேண்டும். இன்னும் கூட தங்களின் கையெழுத்தைக்கூட தமிழில் பதிக்கத் தயங்குபவர்களையும், மறுப்பவர்களையும் வைத்துக்கொண்டு நாம் இங்கே என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்? என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.