பெரியார் சிலை மீது செருப்பு மாலை….தமிழ்நாட்டை அமளிக்காடாக்க காவிகள் – காலிகள் முயற்சிக்கிறார்கள்.! பொங்கி எழுந்த கி.வீரமணி..

0
Follow on Google News

கோவை – வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலைக்கு காவி பொடியை தூவி செருப்பு மாலை அணிவித்துள்ள சம்பவம் குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் – வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு நேற்றிரவு (8.1.2022) கயவர்கள் செருப்பு மாலை போட்டுள்ளனர். தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள் – தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது – கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு – காவல்துறையின் நடைமுறையாகவும் ஆகிவிட்டது.

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், சமூகநீதியில் நமது முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் – முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு (காவல்துறை முதலமைச்சரின் துறை) குற்றவாளிகள் – அதன் பின்னணியில் இருப்பவர்கள்மீதான நடவடிக்கை – தண்டனையை சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான் – இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று காவிகள் – காலிகள் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.