தமிழ்நாட்டிலேயே பிரபலங்களின் கனவு முகவரி என்று ஒரு பகுதியைச் சொல்ல வேண்டுமென்றால், அது சென்னையின் போயஸ் கார்டன்தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லம் என பல முக்கிய பிரமுகர்களின் முகவரியாக திகழும் இந்த பகுதி, பலருக்கும் ஒரு தனி கவுரவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
அந்த பட்டியலில் சமீபத்தில் நடிகர் தனுஷும் இணைந்தார். போயஸ் கார்டனில் வீடு வாங்கியதை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த அவர், “நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? அது என்னுடைய நீண்ட நாள் கனவு” என்று ஒரு திரைப்பட விழா மேடையிலேயே உருக்கமாக பேசியிருந்தார். அந்த பேச்சு அப்போது பெரும் கவனத்தையும் பெற்றது.

இந்த நிலையில், தற்போது போயஸ் கார்டன் தொடர்பாக நடிகை நயன்தாராவும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். சென்னையின் போயஸ் கார்டனில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தின் பின்புற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நயன்தாராவுக்காக புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் அவர் குடும்பத்துடன் அங்கு குடியேற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டிடம் ஐந்து மாடிகளைக் கொண்டதாகவும், மேல்தளத்தில் உள்ள இரண்டு பகுதிகளையும் நயன்தாரா பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருவதால், ஆடி முடிந்த பிறகும், நடிகர் கவினுடன் அவர் நடித்துள்ள “ஹாய்” திரைப்படம் வெளியான பிறகும் குடியேற்றம் நடைபெறலாம் என்று திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே சென்னை, ஊட்டி, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் நயன்தாராவுக்கு சொந்த வீடுகள் இருந்தாலும், போயஸ் கார்டனில் அவர் குடியேற உள்ள தகவல்தான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. திரைப்பட உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் முதல், ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சிப்பது வரை பல விவகாரங்கள் பேசப்பட்டன.
அந்த பின்னணியில், தற்போது தனுஷின் கனவு முகவரியாகக் கருதப்பட்ட போயஸ் கார்டனிலேயே நயன்தாராவும் குடியேற உள்ளதாக தகவல் வெளியானதால், “இது வெறும் தற்செயலா… இல்லை தனுஷுக்கு போட்டியாக எடுக்கப்பட்ட முடிவா?” என்ற கேள்வியும் திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனவே, இது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரவி வரும் தகவலாகவே பார்க்கப்படுகிறது.எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது நடிகை நயன்தாராவும் போயஸ் கார்டன் பிரபலங்களின் பட்டியலில் இணைகிறார் என்ற தகவல்தான், கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.

