என்ன கொடுமை சார் இது… இப்படியா கேவலமா எடுப்பது.. சந்திரமுகி 2 குறித்த சுட சுட விமர்சனம்..

0
Follow on Google News

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், சந்திரமுகி 2. சந்திரமுகி படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. முதல் படத்தை இயக்கிய பி.வாசுதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அதே வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜாதான் இந்த படத்திலும் முக்கிய புள்ளிகள்.

முந்தைய பாகத்தில் கதையை சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடித்தனர். ஆனால் இந்த படமோ முழுக்க முழுக்க பேய்-த்ரில்லர் படமாக உள்ளது. சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம், சுமார் 80 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு உருவானதாக கூறப்படுகிறது.காட்டன் மில் ஓனரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன.

அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகளால் (லட்சுமி மேனன்) நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். தங்கள் குலதெய்வத்தை ரங்கநாயகியின் குடும்பம் மறந்து போனதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அவர்கள் குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) சொல்வதைக் கேட்டு சந்திரமுகி பங்களா இருக்கும் ஊருக்கு செல்கின்றனர்.

வேற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்த மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், அந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியனான பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அந்த ஊருக்கு வருகின்றனர். சந்திரமுகி பங்களாவின் தற்போதைய ஓனர் முருகேசனிடம் (வடிவேலு) அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை,

தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே கதை.
காமெடி என்ற பெயரில் வடிவேலுவும் லாரன்ஸும் செய்பவை சிரிப்புக்கு பதில் எரிச்சலை மட்டுமே வரவைக்கின்றன. அதிலும் முந்தைய பாகத்தில் “பேய் இருக்கா இல்லையா?” என்று வரும் கிளாசிக் காமெடியை வேறு மாதிரி எடுக்கிறேன் என்று ‘பேய்க்கு வயசாகுமா? ஆகாதா?’ என்று ஒரு நீ….ண்ட காட்சியை வைத்திருக்கிறார்கள். அரங்கம் முழுக்க மயான அமைதி நிலவுகிறது.

படத்தில் பரிதாபமான உயிரினம் அந்த பாம்புதான். முதல் பாகத்தில்தான் அந்த பாம்பை அம்போவென விட்டுவிட்டார்கள் என்றால், இந்தப் படத்திலும் அதற்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இனியும் கூட அந்த பாம்பு ‘சும்மா’ இருப்பதற்கு உதாரணமாக மீம்ஸ்களில் இடம்பெறப் போகிறது என்பதை நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்கிறது.முதல்பகுதியில் ஏற்கெனவே வேட்டையனைக் கொன்ற சந்திரமுகி எதற்காக மீண்டும் வேட்டையனைக் கொல்ல வருகிறார் என லாஜிக் கேள்விகள் எழக் கூடாது.

இம்மாதிரியான கமர்ஷியல் படத்தில் லாஜிக் இல்லையென்றால் ஏதாவது மேஜிக்காவது இருந்திருக்க வேண்டும். படத்தில் வரும் பாடல்கள் வைக்க வேண்டும் என்று வைத்தது போலவே இருக்கிறன.
ஒட்டுமொத்தமாக படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘சந்திரமுகி’யில் பிரபு சொல்லும் வசனத்தையே நாமும் சொல்லலாம். ‘என்ன கொடுமை சார் இது..?’