என் வீட்டில் வந்து நீ பார்த்தியா..? நடிகை கீர்த்தி பாண்டியனிடம் கேட்க கூடாத கேள்வி கேட்டு அனைவரும் முன்னிலையில் முக்குடைபட்ட பயில்வான்..

0
Follow on Google News

கண்ணகி படத்தின் கதாநாயகி கீர்த்தி பாண்டியன், தன்னிடம் அனாவசியமாக பேசி வம்பு இழுத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனை பதிலுக்கு சரமாரியான கேள்விகளைக் கேட்டு அலறவிட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பற்றி வாய்க்குவந்தவாறு பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

இவரது நக்கலான பேச்சு மற்றும் வதந்திகள் பிரபலங்களை மட்டுமின்றி, ரசிகர்களையும் வெறுப்பேற்றி விடும். இவ்வாறு தினசரி ஒரு பிரபலத்தை வம்பிழுத்து வரும் பயில்வான் ரங்கநாதன், இப்போது கீர்த்தி பாண்டியனை வம்புக்கு இழுக்க முயற்சி செய்து, அவரிடம் சரியாக வாங்கி கட்டிக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில் வெளியான தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன்,

அடுத்ததாக 2021 ஆம் ஆண்டில் அன்பிற்கினியான் படத்தில் நடித்து விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகை என்றாலே, கலரா இருக்கணும், கொழு கொழுன்னு இருக்கணும் என்கிற இலக்கணத்தை உடைத்து, முழுக்க முழுக்க தன் நடிப்பு திறமையை மட்டுமே வைத்து வளர்ந்து வரும் நடிகையாக தமிழ் சினிமாவில் கால் பதித்து உள்ளார்.

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடும்பத்தினருடன் சேர்ந்து நாற்று நடுவது, டிராக்டர் ஓட்டுவது மற்றும் காளைகளை பராமரிப்பது என மண் மணம் மாறாமல் விவசாயத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் பலவற்றையும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியிடுவார்.
இவர் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து மணம் முடித்தார்.

இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்த ப்ளூ ஸ்டார் படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக, அவரது கண்ணகி படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி படக் குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பட குழுவினர், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தனர். அப்போது, சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு கீர்த்தி பாண்டியனிடம் டோஸ் வாங்கியுள்ளார்.

அதாவது கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தோடு, அசோக் செல்வன் நடித்த சபாநாயகன் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்ட பயில்வான் ரங்கநாதன், “வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டைனா, இந்த வாரம் தியேட்டரில் ரெண்டு பேரோட படமும் மோதுதே” என்று சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார்.

இதைக்கேட்டு கடுப்பான கீர்த்தி பாண்டியன், நாங்க சண்டை போட்டோம்னு எங்க வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா என கேட்டதும் சரி போட்டினு வச்சிக்கோங்க என பயில்வான் மழுப்ப, எங்களுக்கு இடையே போட்டியும் இல்ல சண்டையும் இல்ல என கீர்த்தி பாண்டியன் கூறினார். இதற்கு பயில்வானும், சண்டை வந்தால் தான் கணவன், மனைவி இடையே இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் என சொன்னதும், அதை நான் வீட்லயே பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி கீர்த்தி பாண்டியன் அவரை வாயடைக்க செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாகவும் கூறப்படுகிறது.