நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இயக்கிய படம் இட்லி கடை. வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இட்லி கடை படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா படம் தமிழ்நாட்டில் சரியாக போகாவிட்டாலும் ஆந்திரா தெலுங்கானாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய ஹிட் கொடுக்காததால் எப்படியாவது ஒரு பெரிய ஹிட் படம் கொடுத்து விட வேண்டும் என்பதில் முனைப்போடு நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். இந்த நிலைமையில் இப்போது இட்லி கடை என்ற படத்தை நடிகர் தனுஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கிறார். டான் பிக்சர் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் சத்யராஜ் ராஜ்கிரண் அருண் விஜய் பார்த்திபன் மற்றும் கதாநாயகியாக நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே நடிகர் தனுஷூடன் நித்யாமேனன் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த ஜோடி மீது கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. முதலில் இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அப்போது நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரு வழியாக இன்னும் சில தினங்களில் அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இட்லி கடை படம் ரிலீஸாக சில தினங்களே இருப்பதால் சென்னை கோவை மதுரை திருச்சி என நடிகர் தனுஷ் தொடர்ந்து இட்லி கடை படம் பிரமோசன்களில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக ஐதராபாத்தில் இட்லி கடை பிரமோஷன் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடிகர் தனுஷ் இளம் வயதில் தானும் தனது குடும்பமும் பட்ட கஷ்டங்களை குறிப்பாக வறுமை நிலை குறித்து எல்லாம் வெளிப்படையாக பேசி வருகிறார்.
இதுவரை எந்த படத்துக்காகவும் அவர் இந்தளவுக்கு வெளிப்படையாக தனது குடும்ப விஷயங்களை பகிரங்கமாக பேசியது இல்லை. இந்நிலையில் இட்லி கடை படத்தில் இளம் வயது தனுசாக நடித்த சிறுவனின் தாயார் தனுஷ் குறித்து மதுரையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது என் உயிர் இருக்கும் வரை உங்களை நினைத்திருப்பேன். எனது மகன் வயிற்றில் இருக்கும் போது இருந்தே உங்களை நினைத்து தான் பெற்றெடுத்தேன்.
அதனால் தான் அவன் உங்களைப் போலவே இருக்கிறான். நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனுஷூக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவனை வளர்த்து இருக்கிறேன் என்று மிகவும் உணர்ச்சிக்கரமாக பேசினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்.
அதில், தனுஷ் அவர்களே… இட்லி கடை படத்தை எல்லோரும் பார்த்து ஹிட் ஆக்கிடறோம். தயவுசெய்து இந்த ஃப்ரீ ரிலீஸ் சென்டிமெண்ட் பர்பாஃமென்ஸ் நிறுத்திடுங்க. இதுக்கு மேல உணர்ச்சி வசப்பட்டா எங்க பாடி தாங்காது. இவங்க கணவர் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்குமோ பாவம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது சினிமா பிரபலங்கள் இப்படி பிரமோசன்களை நடத்துவதே படத்தை விளம்பரப்படுத்த தான். இதில் சென்டிமென்ட் பர்பாஃமென்ஸ் எல்லாம் போட்டு எங்களை கொல்லணுமா? என்றும் ப்ளு சட்டை மாறன் அவரது பாணியில் கலாய்த்து தள்ளி விட்டார்.

