வடிவேலுக்கு கிடைச்சிருக்கு அப்பாயிண்மெண்ட் ஆர்டரு: 5 படங்களுடன் களத்தில் குதிக்கிறார்.

0
Follow on Google News

வடிவேலுக்கு அடிச்சிருச்சு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு: 5 படங்களுடன் களத்தில் குதிக்கிறார். தனது நகைச்சுவையான நடிப்பால் உலக மக்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழகத்தில் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் இவரது காமெடிதான் மீம்ஸ்களாக பறக்கும். அந்தளவுக்கு இவரது காமெடி மக்களிடையே பிரபலம்.

இந்நிலையில் கடந்த சிலவருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த வடிவேலுவுக்கு மீண்டும் நடிப்பதற்கான அப்பாயிண்மெண்ட் ஆர்டர் கிடைச்சிருக்கு. ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தனக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு புதிய படங்களில் நடிக்க தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்பட்டு, வடிவேலு நடிக்க விதித்த தடையை தயாரிப்பாளர்கள் சங்கம் விலக்கியுள்ளது. இதுதொடர்பாக வடிவேலு கூறும்போது,

‘நான் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்கிற செய்தி, முதன்முதலில் நான் வாய்ப்பு தேடியலைந்தபோது ஏற்பட்ட உணர்வைப் போல் இருக்கிறது. என் ரசிகர்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். இதன்மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். ஐந்து படங்களில் என்னை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்துல எனக்கு 20 வயது ஆன மாதிரி இருக்கிறது’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.