ஐந்து வருடம் போலீசாருக்கு தண்ணி காட்டிய ரவுடி… கள்ளக்காதலியுடன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம்..!

0
Follow on Google News

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பிரபல ரவுடியான செல்வகுமார் (37) ஐந்தாண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்தான். இந்நிலையில் தனிப்படை போலீசார் அவனை கள்ளக்காதலி வீட்டில் வைத்து கொத்தாக தூக்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடையன்கால் முனியூர் மேலத்தெருவில் வசிப்பவர் முருகையன். இவரது மகனான செல்வகுமார் மீது தஞ்சை திருவாரூர் காவல்நிலையங்களில் கொள்ளை கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவாரூர் மாவட்டம் அரித்துவராமங்கலத்தில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் மிக முக்கியமான ரவுடிகள் பட்டியலில் செல்வகுமார் பெயரும் உள்ளது.

அரசியல் கட்சியினர் மற்றும் தொழிலதிபர்கள் போன்றவர்களிடம் மிரட்டி பணம்பறித்து வந்ததாக கூரப்பப்டுகிறது. கூடவே கட்டப்பஞ்சாயத்தும் செய்துவந்துள்ளான். இவன் மீது இரு மாவட்டங்களிலும் வழக்கு அதிகமாகவே இவனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதையறிந்த செல்வகுமார் தலைமறைவானான். இந்நிலையில் தஞ்சை போலீஸ் சூப்பரின்டென்ட் ரவிப்ரியா செல்வகுமாரை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.

சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கணபதி, போலீஸ் ஏட்டு உமாசங்கர் மற்றும் ராஜேஷ் உட்பட ஆறுபேர் கொண்ட தனிப்படை செல்வகுமாரை தீவிரமாக தேடிவந்தது. சிவகாசி கோவில்பட்டி சாத்தூர் என பலபகுதிகளில் மறைந்து வாழ்ந்துள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைக்கவே விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதன்பலனாக மதுரையில் மறைந்துவாழ்ந்த செல்வகுமார் பற்றிய துப்புகிடைத்தநிலையில் கடச்சனேந்தல் பகுதியில் துருவித்துருவி விசாரித்தபோது கள்ளக்காதலி வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து துப்பாக்கியுடன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அவனை அதிரடியாக கைதுசெய்து அம்மாபேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செல்வகுமார் மீது ஐந்து கொலைவழக்குகள் மற்றும் ஐந்து கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை காவல்நிலையத்தில் மட்டுமே ஒன்பது பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.