கோலியின் செயல்கள் அணிக்கு ஒரு செய்தியாக இருக்கும்…. ரோஹித் ஷர்மா பாராட்டு!

0
Follow on Google News

இந்திய அணியின் புதுக்கேப்டன் ரோஹித் ஷர்மா முன்னாள் கேப்டன் கோலி குறித்து பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் கிரிக்கெட் அணியில் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தாலும், ஏற்கனவே இதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக செயல்பட்டு வரும் கோலி, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்பது ஒன்றே குறையாக சொல்லப்படுகிறது. அதனால் ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் கோலி தானாகவே பதவி விலகுவார் என 48 மணிநேரம் காத்திருந்ததாகவும், அவர் இறங்கி வராததால் நீக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா கோலியின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதி இந்திய அணிக்கு ஒரு நற்செய்தியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் ‘கோலி கேப்டனாக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளையும் மறக்க முடியாது. அவர் தலைமையின் கீழ் விளையாடியது அற்புதமானது. நான் அவரோடு நிறைய கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளேன். அந்த ஒவ்வொரு தருணங்களையும் நான் ரசித்துள்ளேன்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.