எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்ததைக் கண்கூடாகக் கண்டோம்.! கமல்ஹாசன் வேதனை…

0
Follow on Google News

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் அந்த கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர். மகேந்திரன், எம். முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.

இவற்றை ஏற்றுக்கொள்வதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதையும் தலைவரே முடிவு செய்யட்டும் தெரியப்படுத்தினர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கொடுத்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். ‘துரோகிகளைக் களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார்.

கட்சிக்காக உழைக்கத் தயாராக தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை.

என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளரவேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.