‘பெரியப்பா’ பேராசிரியரிடம் பெற்ற பயிற்சிதான் எனக்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது.! முக ஸ்டாலின் உருக்கம்.!

0
Follow on Google News

திமுக முன்னால் பொது செயலாளர் மறைந்த அன்பழகன் நினைவு தினத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெயிட்டுள்ள நினைவேந்தல் அறிக்கையில், திராவிடக் கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்தும் இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்! இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் வைரம் பாய்ந்த மரம் போல உறுதியாகப் பற்றி நின்று, தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதி, கழகத்தில் தன்னைவிட இளையோர் அனைவருக்கும் திராவிட வகுப்பெடுத்துக் கொள்கை உணர்வினை ஊட்டியவர் நம் இனமானப் பேராசிரியர்.

குடும்பப் பாசம் மிகுந்த இயக்கமான தி.மு.கழகத்தில் தலைவர் கலைஞரிடம் எந்தளவுக்கு இயக்கப் பயிற்சி பெற்றேனோ அதே அளவுக்கு, ‘பெரியப்பா’ பேராசிரியரிடமும் பயிற்சியினைப் பெற்றேன். அந்தப் பயிற்சிதான் இன்று தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும் பொறுப்பைச் சுமந்து பயணிப்பதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக – பேரறிஞர் அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக – தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக – இயக்கக் கருத்தியலின் தலைவராகத் தன் வாழ்நாள் முழுவதும் திராவிடம் பரப்பிய – பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி, மதவாத – பிற்போக்கு – அடிமை சக்திகளை முறியடித்து, மதநல்லிணக்க – சுயமரியாதைமிக்க – சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்!