வாக்கு பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை அவசியம்.! தேர்தல் ஆணையம் அதிரடி.!

0
Follow on Google News

சென்னையில் உள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கையேடு 2021-ஐ சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் திரு.சத்யபிரத சாகு பேசியதாவது:-

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் முற்றிலுமாக நீங்காத நிலையில், இந்த சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொற்று மேலும் பரவாமல் இருக்க அனைவருமே கொரோனா தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தொற்றுப் பரவாதபடி, வாக்காளர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக தேர்தல் ஆணையம் கையுறைகளை இலவசமாக விநியோகிக்க உள்ளது.

கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவதற்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கான சக்கர நாற்காலி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் வசதியும் (பிரெய்லி எழுத்து பதிவுகள்) அளிக்கப்பட உள்ளது.

இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 34 சதவீதம் அதிகரிக்கிறோம். அங்கு பணியாற்ற இருக்கும் அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து வருகிறோம். ஓட்டு எந்திரம், வாக்குப்பதிவு உறுதிச் சீட்டு எந்திரங்கள் (விவிபேட்) ஆகியவை மிகுந்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்குப் பிறகு அவற்றை இடமாற்றம் செய்வதற்கும் போதிய அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க சிறப்பு தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள், சி-விஜில் (C-Vigil) செல்போன் செயலி மூலம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள், படங்களை அனுப்பலாம். இவ்வாறு அவர் பேசினார்.