திமுகவினருக்கு வார்த்தை சுத்தம் கிடையாது.. திமுக ஆட்சிக்கு விரைவில் சங்கு ஊதப்படும்.! மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு

0
Follow on Google News

அம்மா பல்கலைக்கழகத்தை மூடுவதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணித்து விட்டது என்றும், தமிழக மக்களுக்கு ஸ்டாலின் துரோகம் செய்து விட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். தி.மு.க. அரசை கண்டித்துஅதிமுக சார்பில் விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டதில் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது:-

தி.மு.க. ஊருக்கு ஒரு பேச்சு பேசி வருகிறது. திமுகவினருக்கு வார்த்தை சுத்தம் கிடையாது. ஏழை, எளிய விவசாயிகள் உள்ள மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி கல்வி பயிலவே விழுப்புரத்தில் அம்மா பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகத்தில் அம்மாவின் பெயர் இருக்கிறதே என்ற ஒரே காரணத்திற்காக பொன்முடி இந்த பல்கலைக்கழகத்தை மூட முடிவு எடுத்துள்ளார். மாணவர்களின் உயர்கல்வி கனவை சிதைக்கின்ற வகையில் பொன்முடி இந்த முடிவை எடுத்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை தலை நிமிர செய்வோம் என்று சொன்ன தி.மு.க. வளர்ச்சி திட்டப் பணிகளை தடுக்கிறது. நிதி இல்லை என கூறி பல்கலைக்கழகத்தை மூட நினைக்கும் தி.மு.க. அரசு மதுரையில் 200 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி பெயரில் நூலகம் திறக்க முயற்சிக்கிறது. இதற்கு மட்டும் நிதி இருக்கிறதா?

ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வது மாவட்டத்திற்கு தான் பெருமை. விழுப்புரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை அமைச்சர் பொன்முடி மூடுவதை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் கேட்கவில்லை? வாக்களித்த மக்களை மறந்து விட்டார்கள்., அவர்கள் எண்ணம் எல்லாம் கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் தான். தி.மு.க. மனசாட்சி இல்லாமல், மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறையில்லாது சீர்குலைத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

.பல்கலைக்கழகத்தை நடத்த முடியாத இந்த அரசு எதற்கு? அண்ணா, பாரதியார் போன்ற பல்கலைக்கழகம் போல தான் ஜெயலலிதா அம்மா பல்கலைக்கழகமும். அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பது ஏன்? அம்மா பெயர் தான் உங்களுக்கு காரணம் என்றால் வேறு யார் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அம்பேத்கர் பெயரை கூட வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் காழ்புணர்ச்சி காரணத்திற்காக, அம்மா பெயர் இருக்கின்ற காரணத்திற்காக இந்த பல்கலைக்கழகத்தை மூட நினைக்கக்கூடாது.

அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மேல் மக்கள் வரி பணத்தை அரசு வழங்கி வருகிறது. தற்போது அண்ணாமலை பலகலைக்கழகத்தின் நிலைமை என்ன? 300 கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தை கொடுக்க என்ன காரணம்? அம்மா பல்கலைக்கழகம் கழக அரசால் கொண்டு வரப்பட்டதை பொன்முடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அம்மா பல்கலைக்கழகத்தை மூடுவதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களுக்கு ஸ்டாலின் துரோகம் செய்கிறார். அதேபோல் அம்மா பல்கலைக்கழகத்தை மூடுவதன் மூலம் தொகுதி மக்களுக்கு பொன்முடி துரோகம் செய்துள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனே அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது. அம்மா மருந்தகம் இன்று இல்லை. இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வோர் சதவீதத்தை தமிழகத்தில் 52 சதவீதமாக உயர்த்தியது அம்மா அரசு. அம்பேத்கர் பெயரில் இந்த பல்கலைக்கழகம் இயங்கட்டும்.

இந்த பல்கலைக்கழகம் இயங்க வேண்டும். அரசியல் காரணத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது. மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் தவறான முடிவை தி.மு.க. மாற்றிக்கொள்ள வேண்டும். பொன்முடி வைத்துள்ள கல்லூரியை வளர்க்க நினைக்கிறாரோ என்னவோ? தி.மு.க. எதை செய்தாலும் வியாபாரமாக தான் செய்கிறது. திமுக ஆட்சிக்கு விரைவில் சங்கு ஊதப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.