முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பா.ரஞ்சித்.. கலைஞனுக்கும் இது அழகல்ல.! எச்சரிக்கும் மாஜி அமைச்சர்..

0
Follow on Google News

குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவரான எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க தி.மு.க.வின் பிரச்சார படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர்.

மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் என ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே தன்னை வெளிப்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதற்காக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. போட்டி முடிந்ததும் முகமதுஅலியை தன் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்கு குத்துச்சண்டை மீது காதல் கொண்டிருந்தார் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால் சார்பட்டா திரைப்படம் தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாதவரை தி.மு.க.வை மேடைக்கு மேடை குத்தி கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? அதிகாரம் மைய இடத்தில் அடைக்கலமாகி எதிர்க்கட்சியின் மீது புழுதிவாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல, கலைஞனுக்கும் அது அழகல்ல.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். படங்களில் விளையாட்டு வீரராக ஏற்று வரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.