தமிழக ஆளுனர் மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது.! இது மனித உரிமை மீறல் என மருத்துவர் ராமதாஸ் வேதனை.!

0
Follow on Google News

பேரறிவாளன் விடுதலைகுறித்து உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுனர் முடிவெடுக்காதது அநீதி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25-ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28-ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும்.

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை. காரணம்… இந்த விஷயத்தில் இருந்த சர்ச்சைகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து விட்டது. பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும் வாழ்நாள் தண்டனைக் காலத்தை இரு மடங்குக்கும் கூடுதலான காலத்தை சிறையில் கழித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் இரு ஆண்டுகளைக் கடந்தும் அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுனர் முடிவெடுக்காததை எதிர்த்து தான் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது ராஜிவ் கொலைச்சதி குறித்து நடைபெற்று வரும் பல்முனை கண்காணிப்பு குழுவின் (எம்.டி.எம்.ஏ) விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தான் இது குறித்து ஆளுனர் முடிவெடுப்பார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், எம்.டி.எம்.ஏ விசாரணை அறிக்கைக்கும், 7 தமிழர் விடுதலைக்கும் தொடர்பில்லை என்றும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என்றும் கூறிவிட்டது.

அதன்படி பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு மணி நேரத்தில் ஆளுனர் எளிதாக முடிவெடுக்க இயலும். ஆனாலும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, ஒரு வாரம் கழித்து கெடு முடியும் நாளில், தமிழக ஆளுனரின் செயலாளர் தில்லி சென்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்துப் பேசியுள்ளார். 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டு 875 நாட்கள் கடந்து விட்டன. இத்தனை நாட்களாக நடத்தாத எந்த சட்ட ஆலோசனையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுனரின் செயலர் நடத்தினார்? எனத் தெரியவில்லை. இவை அனைத்தும் பேரறிவாளன் விடுதலையை தாமதப்படுத்தும் செயல் என்பதைத் தவிர வேறல்ல. ஆளுனரின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுனர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுனர் செயல்பட வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.