மோடி மஸ்தான் வேலைகள் இங்கே பலிக்காது.! இது பெரியாரும் – கலைஞரும் பண்படுத்திய மண்.! முக ஸ்டாலின் பிரச்சாரம்.!

0
Follow on Google News

கோவையில் நடத்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியை தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது இது பெரியார் – அண்ணா – கலைஞர் பிறந்த மண். அண்ணாவும் – பெரியாரும் – கலைஞரும் பண்படுத்திய மண். இங்கே உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் நிச்சயமாக எடுபடாது. உங்களுக்குத் தெரியும் பக்கத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கடத்தப்பட்டு, எஸ்டேட்டில் வைத்து, பலாத்காரம் செய்து, வீடியோவில் பதிவு செய்து மிரட்டி அச்சுறுத்தி பணம் பறித்த கொடுமைகள் எல்லாம் நடந்து இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே எங்கும் நடந்திருக்க முடியாது. இது காவல் துறைக்குத் தெரியாதா?
அதில் சமீபத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருளானந்தம் என்கின்ற ஒரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட அருளானந்தம் வேலுமணியுடன் எடுத்த புகைப்படம் வெளிவந்திருக்கிறது. அதேபோல பொள்ளாச்சி ஜெயராமனுடன் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் புகைப்படமும் வந்திருக்கிறது. உண்மைகள் வெளிவந்தே தீரும். அவ்வாறு வரவில்லை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அது கண்டுபிடிக்கப்பட்டு முறையான தண்டனை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்தாண்டுகள் இந்தத் தமிழகம் பாழுங் கிணற்றில் தள்ளப்பட்டிருக்கிறது. பாழாய்ப் போயிருக்கிறது. சீரழிந்து போயிருக்கிறது. ஐம்பதாண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது. அந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து, மதவெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு நான் சொல்வது, கனவு காணாதீர்கள். இது திராவிட மண். யாரும் நெருங்க முடியாது.

தமிழக மக்களுக்கு டெல்லியிலிருந்து வருபவர்கள் ஆணை இடலாம், உத்தரவிடலாம், கட்டளையிடலாம். மோடி அவர்களே உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கே பலிக்காது. இது தமிழினத்தின் சுயமரியாதைக்காக நடக்கும் தேர்தல். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் மட்டுமல்ல. நம்முடைய சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள் என ஸ்டாலின் பேசினார்.