ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும்.! கனிமொழி உறுதி..

0
Follow on Google News

திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார் மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சுமார் 3,523 பேர் இறந்துள்ளனர்.

டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் அல்லது ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகளவில் இல்லையென்றாலும் கூடிய விரைவில் தமிழ் நாடும் அதே நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 22.04.2021 அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ”நீங்கள் பிச்சை எடுத்தோ கடன் வாங்கியோ அல்லது திருடியோ மக்களுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உயிர் பிழைக்க உதவுங்கள்” என்று கடுமையாக கூறியது. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் மக்களை உயிரிழப்பிலிருந்து காக்கவே, தமிழக அரசு சார்பில் 26.04.2021 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என்று திமுக சார்பில் கூறியிருந்தோம்.

பின்னர் 27.04.2021 அன்று உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே திறக்க வேண்டும், மேலும் இதை பயன்படுத்தி எந்தவித பராமரிப்பு பணிகளையும் ஸ்டெர்லைட் நிறுவனம் முன்னெடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சி அமைந்ததும் இந்த தற்காலிக அனுமதிக் காலம் முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களும் தூத்துக்குடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராகிய நானும் தூத்துக்குடி மக்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். ஸ்டெர்லைட் தாமிர ஆலையை எக்காலத்திலும் திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே மக்களுக்கு தந்திருக்கும் உறுதியை காப்பாற்றுவோம் என்பதை மக்கள் அறிவார்கள்.