பிடிவாதம் பிடிக்கும் அண்ணா பல்கலை மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு எம்.டெக்., படிப்புகளின் மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியும் அதை ஏற்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருக்கிறது. மாணவர்களின் நலனை பாதிக்கக் கூடிய அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோ டெக்னாலஜி, எம்.டெக், கம்ப்யுடேசனல் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை உதவியுடன் நடத்தப்பட்டு வந்தன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிப்பதா அல்லது மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிப்பதா என்பது தொடர்பான சர்ச்சை எழுந்ததை அடுத்து இந்த இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. ஆனால் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி இந்த இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தவறான அணுகுமுறை காரணமாக மாணவர் சேர்க்கை இன்றுவரை நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் புகழேந்தி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று என்ற முறையில் மாணவர் நலனில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அக்கறை இருந்திருந்தால் உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தியிருந்திருக்க வேண்டும்.

ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் அவ்வாறு செய்யாமல் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு தான் உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தரவேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க தவறானது. இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தன்னிச்சையாக நிறுத்தியது அண்ணா பல்கலைக்கழகம் தான். அதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை போக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தான் உண்டு. இந்த பொறுப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் அதன் கடமையிலிருந்து விலகி இருக்க முடியாது.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை இடங்கள் யாருக்கும் பயன்படாமல் வீணாவதை உச்சநீதிமன்றம் விரும்புவது இல்லை. அண்மையில் கூட மருத்துவம், பல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் போதிய மாணவர்கள் இல்லாததால் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பான தகவல் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அப்படிப்புகளுக்கான கல்வித்தகுதியை தளர்த்தியாவது காலியாக உள்ள இடங்களை நிரப்பும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாகிவிடக்கூடாது என்பதில் இந்த அளவுக்கு அக்கறைக் காட்டும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அவகாசம் முடிந்துவிட்டது தொடர்பான சிக்கல் கொண்டுசெல்லப்பட்டிருந்தால் நிச்சயமாக அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருந்திருக்கும். ஆனால் அதற்கு மாறாக உச்சநீதிமன்றத்தை நாங்கள் அணுகமாட்டோம்; அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுதான் அணுக வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறிவருவது ஏற்றுக்கொள்ளவே முடியாத அணுகுமுறை ஆகும். இந்த அணுகுமுறையால் இரு எம்.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை யாராலும் ஈடு செய்யமுடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்ட பிறகுதான் அந்த பல்கலைக்கழகம் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் இத்தகைய அணுகுமுறைகளை கடைபிடித்துவருகிறது.

மாணவர்களின் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழக அரசே உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.