இது மக்கள் ஆட்சிக்கும் – குடும்ப ஆட்சிக்கும் இடையேயான அரசியல் போர்..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி..

0
Follow on Google News

தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்று கொண்ட அண்ணாமலை வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,அன்பு தமிழ் சொந்தங்களே, பாஜகவின் தூண்களே, கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் மனம் தளராமல் ஆராய்ந்து, துணிந்து, செய்யத்தக்க வேலையை சோர்வு கொள்ளாமல், காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும் என்கிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர், துணிவுடன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்ற வேண்டிய நேரமிது,

ஜன சங்கம் தொடங்கியதிலிருந்து இந்த இயக்கத்திற்காக பலர் உழைத்துள்ளனர், தங்கள் வாழ்வையே
அர்பணித்துள்ளனர். பெருங்கோயிலை கட்ட பல திறமையும், தியாகமும் தேவை. அது போலவே தமிழக பாஜக என்ற கோயில் பல காரிய கர்த்தாக்கள் தங்கள் இன்னுயிரையும் நீர்த்த வேள்வியில் உருவானது,
தமிழக பாஜகவின் திரளான தொண்டர்களின் கூட்டம் இன்று பேராற்றலுடன் ஒரு கடல் போல பொங்கி வருகிறது

நாம் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியினால் 20 வருடங்கள் கழித்து நான்கு சட்டமன்ற
உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம். நான்கு என்பது நூற்றி ஐம்பதாக மாற வேண்டும், நாம் மாற்றி காட்ட வேண்டும். ஒற்றை தலைமையோ, குடும்ப அரசியலோ இல்லாத ஒரே கட்சி பாஜக. நம் கட்சியில் திறமைக்கு மட்டுமே என்றும் முக்கியத்துவம். தகுதி உள்ளோர், தகுதியை வளர்த்து கொள்ள துணிந்தோருக்கான கட்சி நம் பாஜக பாஜகவில் தமிழகதிலும், நாடெங்கிலும் தகுதி உள்ளோர் தலைமை பொறுப்பிற்கு தக்க தருணத்தில் சென்றிருக்கிறார்கள்.

தலைமை இடம் என்பது மக்களுக்கு சேவை செய்ய வழங்கப்படும் பொறுப்பு. மாநில தலைமையால் மண்டல், கிளை அளவுகளில் உள்ளோர் கவனிக்கப்படுவீர்கள். உழைப்பவர்களுக்கு நிச்சயம் அதற்கான ஊதியம் உண்டு. 70 நாள் ஆட்சியில் நாம் திமுகவிடம் காண்பது வெறும் தவறான வாக்குறுதிகளும், பொய்யுரைகளும் மட்டுமே. செய்ய முடியாததை செய்வோம் என்று கூறுவது, சொல்ல வேண்டிய தகவல்களை மக்களிடமிருந்து மறைப்பது, தேவையற்ற வார்த்தைகளை கொண்டு மக்களை திசை திருப்புவது, பிரிவினைவாதத்தை தூண்டுவது என்று தவறான எல்லாவற்றையும் திமுக செய்து வருகிறது.

வாக்கு கொடுத்த மக்களிடம் திமுகவிற்கு வாக்கு நாணயம் இல்லை, என்றும் இருக்க போவதுமில்லை. தமிழ்நாடும், பாஜகவும் என்றுமே தேசியத்தின் பக்கமே இருந்து வருகிறது, இது தேசியவாதத்திற்கும் – பிரிவினைவாதத்திற்கும், வளர்ச்சிக்கும் – ஊழலிற்கும், மக்கள் ஆட்சிக்கும் – குடும்ப ஆட்சிக்கும் இடையேயான அரசியல் போர். இதில் பாஜகவின் தலைமையில் தேசியம், வளர்ச்சி, மக்கள் ஆட்சி
வெல்லும், பாஜக திமுகவை போல் பொய் பேசுபவர்கள் கிடையாது. நாம் சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று சொன்னோம், அதை செய்தோம், Article 370 நீக்குவோம் என்று சொன்னோம், அதை செய்தோம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன்னோம், அதை செய்தோம், ஒரே நாடு ஒரே வரி கொண்டு வருவோம் என்று சொன்னோம், அதை செய்தோம், இலங்கை தமிழ் சொந்தங்களோடு நிற்போம் என்று சொன்னோம், அதை செய்து காட்டி கொண்டிருக்கின்றோம், தமிழர் நலனில் பாரத பிரதமர் அக்கறை கொண்டிருக்கிறார் என்று சொன்னோம், அதை செய்து காட்டி கொண்டிருக்கின்றோம்.

தமிழகத்தின் 13000 கிராமங்களுக்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் நாமனைவரும் செல்ல வேண்டும். அங்கிருக்கும் நம் தமிழ் சொந்தங்களையும், பாரத பிரதமர் மோடி அவர்களின் மக்கள் பயன் திட்டங்களால் பயனடைந்துள்ள பயனாளிகளையும் சந்தித்து, பாஜகவின் சித்தாந்தத்தையும், தமிழ்நாடும், இந்தியாவும் முன்னேறுவதற்கான திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு இளைஞருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொரு பெற்றோருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். வாருங்கள், நாம் ஒன்றாக இணைந்திடுவோம்.

தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. தமிழக மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பாஜக கூட்டணி பெற்று, வரும் காலங்களில் பிரிவினைவாதிகளையும் பொய் பேசுபவர்களையும் விரட்டியடித்து, தமிழ்நாட்டை உண்மையான வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்று தமிழகத்தை காப்போம். ஒவ்வொரு தமிழரின் முன்னேற்றமே இந்நாட்டின் முன்னேற்றம். அதுவே நம் லட்சியம், ஒன்று கூடி உழைப்போம், தமிழர் வாழ்வில் சிறப்பனைத்தும் கொண்டு சேர்ப்போம். ஒற்றுமை இன்றி ஒன்றுமில்லை, மக்கள் நலமின்றி நமக்கு வேறு எண்ணமில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.