வாழ்க்கை ஒரு பக்கம் வேதனையாக போகிறது…. மறுபக்கம்…? யாஷிகா ஆனந்த் வெளியிட்ட உருக்கமான பதிவு

0
Follow on Google News

இருட்டறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் அடுத்து பங்குபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் சென்னை கிழக்கு சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் இவர் சென்னை திரும்பிக்கொண்டிருந்த வேளையில், இவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. தன்னால் இன்னும் 5 மாதங்களுக்கு எழுந்து நடக்கமுடியாது, படுத்த படுக்கையாகத்தான் இருக்கமுடியும் என்று சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடமையை செய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்த யாஷிகா ஆனந்த், உருக்கமான வார்த்தையையும் பதிவிட்டுள்ளார்.

அதாவது, ஒரு பக்கம் வாழ்க்கை உணர்வற்று, வேதனையாக இருக்கிறது. மறுபக்கம் வாழ்க்கை போய்க் கொண்டு தானே இருக்கும்… பல ஆண்டு கடின உழைப்புக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்ததற்கு எஸ்.ஜே. சூர்யா அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் யாஷிகாவுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி வருகின்றனர். ‘கடமையை செய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெறும் வரவேற்பையும் பெற்றுள்ளது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.