அவருக்கும் குடும்பம் இருக்குல… பரவயில்லை என் உசிரு போகட்டும்… மனித நேயத்துடன் செயல்பட்ட விஜயகாந்த்..

0
Follow on Google News

உடல்நல குறைவினால் மரணம் அடைந்த கேப்டன் விஜயகாந்த், அரசியல் மற்றும் சினிமா என இரண்டு துறைகளிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது மட்டுமில்லாமல், பலர் மனதில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜயகாந்த் கமர்ஷியல் ஹீரோவாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விஜயகாந்த், அவருக்கு பள்ளியில் பிடித்த பாடம் என்றால் அது ஆங்கிலம் தான் . அதுமட்டுமில்லாமல் விஜயகாந்துக்கு ஆக்சன் படம் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே ஆங்கிலத்தில் வெளிவந்த அனைத்து ஆக்சன் படங்களையும் தொடர்ந்து பார்க்கும் விஜயகாந்த் திருமணமான பிறகு பிரேமலதா உடன் இணைந்து ஆங்கில ஆக்சன் படங்களை விரும்பி பார்த்து வந்துள்ளார்.

விஜயகாந்த் மனைவி பட்ட படிப்பு முடித்து ஆங்கிலம் புலமை பெற்றவர்.ஆங்கில படத்தில் வரும் டயலாக்குகள் விஜயகாந்த்க்கு புரியாவிட்டால் மனைவி பிரேமலதாவிடம் கேட்டு தெரிந்து கொள்வாராம். அதுமட்டுமில்லாமல் அந்தப் படங்களில் வரும் தனக்கு பிடித்த சண்டை காட்சிகளை குறித்து வைத்துக்கொண்டு விஜயகாந்த் நடிக்கும் படத்தில் அந்த காட்சிகளை பயன்படுத்தி கொள்வர் விஜயகாந்த்.

விஜயகாந்த் நடிக்கும் படத்தின் மற்ற காட்சிகளாக இருந்தாலும் சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் அதற்கு டூப் வேண்டாம் என தெரிவித்து விடுவார் விஜயகாந்த். அதனாலேயே அவர் சண்டைக் காட்சிகள் அனைத்தும் ஒரு தனி ஸ்டைலில் இருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் நடிக்கும் படத்தின் சண்டை காட்சிகள் டூப் இல்லாமல் அவரே நடிப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

விஜயகாந்த் நடித்த நாளை உனது நாள் படத்தில் விஜயகாந்திற்கு பதிலாக ஒருவர் டூப் போட்டுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் அவருக்கு டூப் போட்ட ஒரு நபர் உயிரிழந்துள்ளார். அதனால் மனம் உடைந்த விஜய்காந்த், இனிமேல் தன் படங்களில் தானே சண்டைக்காட்சிகளில் நடிப்பதாக முடிவு எடுத்துள்ளார். இதற்காக சண்டை பயிற்சிகளையும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு முறை இந்த சண்டை காட்சிகள் மிகவும் பயங்கரமாக உள்ளது, டூப் போட்டுக் கொள்ளலாம் என்று இயக்குனர் ஒருமுறை கூறிய போது, அதற்கு , ஏன் சார் , டூப் போடுகின்றவருக்கு ரெண்டு உசுரா இருக்கு? அவருக்கும் ஒரு உசுரு தானே, அது போறதா இருந்தால் என்னோடு போகட்டும், நானே ரிஸ்க் எடுக்கிறேன் என்று தெரிவித்து டூப் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் இந்த மனிதநேய செயலுக்காகவே விஜயகாந்தை கருப்பு வைரம் என்கிறார்கள் அனைவரும். மேலும் செந்தூரப்பாண்டி படத்தில்விஜயகாந்த் நடித்த போது ஒரு சண்டைக் காட்சியில் நடந்த விபத்தில் விஜயகாந்தின் தோள்பட்டை எலும்பில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஷூட்டிங்கை கேன்சல் செய்யாமல் அந்த வலியுடன் அடுத்த நிமிடமே சாட் ரெடியா போகலாம் என்று கேட்டுள்ளார்.

தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்றும் டெக்னீசியன்களின் பிழைப்பு தன்னால் கெட்டு விடக்கூடாது என்றும் தன்னை கஷ்டப்படுத்தி நடித்துள்ளார். இதனாலையே யாரும் வெறுக்க முடியாத ஒரு மனிதனாக இன்று விஜயகாந்த் உயர்ந்து நிற்கிறார். சொக்கத்தங்கம்… இது விஜயகாந்த் நடித்த படம் மட்டுமல்ல, அவரும் அப்படித்தான் என்பது அவருடைய மறைவில் மக்கள் கண்கலங்கி நிற்பதை பார்க்கும் போது உணரமுடியும்..