ஆட்டோவில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் அத்துமீறிய நபர்… அடுத்து நடந்தது என்ன.?

0
Follow on Google News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சியின் மூலமாக, தொலைக்காட்சித் துறையில் காலெடுத்து வைத்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் நுழைந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக 2010இல் ‘நீதானா அவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாயிருந்தாலும், 2012இல் வெளிவந்த அட்டகத்தி படத்தில்தான் பிரபலாமாகத் தொடங்கினார். என்னதான் அட்டகத்தி படத்தில் இவரது கதாப்பாத்திரம் புகழ் பெற்றிருந்தாலும், அதனையடுத்து இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2014 இல் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில், காக்கா முட்டை படம் வெளியானது.

இந்த படத்தின் மூலம், சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும் தட்டிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு வருடத்தில் ஆறேழு படங்களில் நடிக்கும் அளவிற்கு பிசியாகி விட்டார்.

இவ்வாறு சின்னத்திரையில் இருந்து வந்து இப்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதும் கிடையாது. ஒரு காலத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீபகாலமாக படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. இருப்பினும், சில படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்போது ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், ஒரு பெண் சினிமாவில் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் பாரபட்சமின்றி பாலியல் ரீதியான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதை விளக்கும்படியாக தன் வாழ்வில் நடந்த விஷயம் ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக பகிர்ந்திருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஆட்டோவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். வழக்கம் போல அன்றும் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, தனது அருகில் உள்ள ஆண் நபர் ஒருவர் அவர் மீது கை வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் உடனடியாக ஆட்டோவை நிறுத்தும்படி சத்தம் போட்டு, ஆட்டோ டிரைவரிடம் நடந்ததை கூறி இருக்கிறார்.

அத்துடன் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை கடுமையாகத் திட்டி ஆட்டோவில் இருந்து உடனடியாக இறங்கச் செய்துவிட்டாராம். இவ்வாறு பெண்கள் ஆட்டோ முதல் சினிமா வரை எங்கு சென்றாலும் இது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய நிலைதான் இருந்து வருகிறது. எனவே, அவர்கள் அனைத்தையும் எதிர்நீச்சல் போட்டு கடந்த வந்தால் மட்டுமே வாழ முடியும் என்கிற சூழ்நிலை இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

படங்களில் மட்டுமில்லை நிஜத்திலும் தான் ஒரு துணிச்சலான பெண் தான் என்பதை அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடந்ததை வெளிப்படையாக பேசியது பாராட்டுக்குரிய விஷயம் தான் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.