கமல்ஹாசன் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்… பணமெல்லாம் போச்சு.. லிங்குசாமி வேதனை…

0
Follow on Google News

ஆனந்தம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி முதல் படமே மிக பெரிய வெற்றியை அவருக்கு தேடி தந்தது, குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக அமைந்தது லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படம். இதனை தொடர்ந்து மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய இரண்டாவது படம் ரன். இந்த படம் இளைஞர் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இயக்குனர் லிங்குசாமியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.

தொடர்ந்து சண்டக்கோழி, பீமா, வேட்டை, பையா போன்ற வெற்றி படங்களை இயக்கி வந்த லிங்குசாமி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்தை இயக்கிய பின் தமிழ் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார். இதனை தொடர்ந்து இயக்குனர் பணியை கைவிட்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் லிங்குசாமி, ஆரம்ப கட்டத்தில் லிங்கசாமி தயாரித்த படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்தார் லிங்குசாமி,

அந்த நஷ்டத்தில் இருந்து எழுந்து வர தற்போது வரை போராடி வரும் லிங்குசாமி பொருளாதார ரீதியில் மிக பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருபவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உத்தம வில்லன் படத்தினால் தான் அடைந்த நஷ்டம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். அவர் கலையின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரிடம் நாங்கள் கேட்டது தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் போன்ற படத்தை தான்.

ஆனால் அவர் உத்தம வில்லன் படத்தை எடுக்க ஆர்வமாக இருந்தார். அது தன்னுடைய கனவு படம் என்றும் கூறினார். தைரியமாக பண்ணுங்க ஏதாவது பிரச்சனை வந்தா நான் பாத்துக்குறேன் என்றும்
வாக்குறுதி கொடுத்தார். எங்களுக்கு உத்தம வில்லன் கதையில் உடன்பாடே இல்லை. த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யலாம் என்றோம். படத்தைப் பார்த்துவிட்டு இதை என்னால் பண்ண முடியாது என்றார்.

ஆனால் பின்னாள் வேறொரு கம்பெனிக்கு அந்த படத்தை பண்ணினார். அவரை நம்பிதான் உத்தம வில்லன் படத்தை எடுத்தோம். ரிலீசுக்கு முன்பே எங்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை இல்லை. சில குறைகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்ய சொன்னோம். முதலில் அதற்கு ஓகே சொன்னவர் பிறகு படத்தை அப்படியே ரிலீஸ் செய்யலாம். எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்றார். நாங்கள் சொன்ன கரெக்ஷனை செய்திருந்தால் கூட படம் நல்லபடியாக வந்திருக்கும்.

உத்தம வில்லன் நஷ்டம் குறித்து பேசிய போது 30 கோடிக்கு ஒரு படம் பண்ணித் தரேன் என வாக்குறுதி கொடுத்தார். தற்போதுவரை அது பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறோம் பார்ப்போம் என ஏற்கனவே லிங்கு சாமி கமல்ஹாசனால் தான் நம்பவைத்து ஏமாற்றப்பட்டது குறித்து விளக்கம் அளித்து இருந்தார், ஆனால் வலைப்பேச்சு என்கிற யு டியூபர் உத்தமவில்லன் நல்ல லாபத்தை கொடுத்த படம் என தெரிவிக்க , இதற்கு வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி.

அதில், தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9 கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து FIRST COPY அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன்” எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

“உத்தம வில்லன்” திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான “வலை பேச்சு” என்கிற YOUTUBE சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக இன்று (17-04-2024 ) தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here