திமுகவின் இந்த செயல் தமிழர் பண்பாடு ஆகாது..! திமுகவுக்கு எதிராக கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு அளித்த H.ராஜா..!

0
Follow on Google News

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச்செயலாளரும் எம்.பியுமான ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். காங்கிரஸ் சொல்லுகின்ற எல்லாவற்றையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. அவரவருக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அவரவர்களுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருந்து வந்த தமிழக காங்கிரஸ் தற்போது ஆர்.எஸ் பாரதி பேட்டிக்கு பின் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7பேர் விடுதலையை நீதிமன்றம் அனுமதித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சிகள் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியில்லை. பெரும் மதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும் எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது. ஆகாது என கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரியின் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் H.ராஜா, சரியான கருத்து. பாரதியார் கூட வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் என்று தான் பாடினார். வாழ்க தமிழர் என்று பாடவில்லை. ஏனெனில் தீய தமிழர்கள் வாழ்க என்று சொல்வது சரியல்ல என தெரிவித்து, ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.