அரசியல் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை.. திருநெல்வேலியில் நடந்த பரபரப்பு..!

0
Follow on Google News

திருநெல்வேலி : முன்பெல்லாம் செய்தி ஊடகங்களில் கொலை என்ற சம்பவம் பற்றிய செய்திகள் எப்போதாவது வெளிவந்து பரபரப்பை கிளப்பும். ஆனால் தற்பொழுது கொலை பற்றிய செய்திகள் வராத நாள் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் இரட்டை படுகொலைகள் அடையாளம் தெரியாத சடலம் தலை துண்டிக்கப்பட்ட உடல் என தமிழகத்தையே திகைக்க வைத்த செய்திகள் வெளிவந்த நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம். அதனருகே உள்ள தெற்கு காரச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அமமுக நிர்வாகியான சுப்பிரமணி(40). இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் நான்குசக்கர வாகனங்களுக்கான ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

அதோடு ஆயுள்முதிர்ந்த பழைய வாகனங்களை வாங்கி உடைத்து விற்பனை செய்தும் வருகிறார். கருங்குளம் அமமுக நிர்வாகியான இவர் தொழில் காரணமாக குலவணிகர் புரத்தில் வீடெடுத்து வசித்து வந்தார். இந்நிலையில்தான் இரவு வழக்கம்போல தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். சுப்பிரமணி வீட்டிற்குள் நுழைவதை கண்ட அந்த மர்மக்கும்பல் கண்ணிமைக்கும்நேரத்தில் அவரை சராமாரியாகவெட்டிவீசியது. இதில் நிலைகுலைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் சர்வசாதாரணமாக தப்பியோடியது.

தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் குலவணிகர்புரத்திற்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்த சிசிடிவிக்களை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும் நிலத்தகராறில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.