ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மதுரையில் கால் வைக்க முடியாது..! ஒரு லட்சம் பரிசு அறிவித்த மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவர் DR சரவணன்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

இரு தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெற்ற பாஜக செயல்குழு கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை நகர் மாவட்ட தலைவர் DR சரவணன்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்ற பெயர் சூட்டுவதில் தவறுயில்லை. பலர் தங்களது பெயரை காலப்போக்கில் மாற்றுகின்றனர், அதைப்போலவே மாற்றிக் கொள்ளலாம். நமது தமிழ்நாடு முதல்வர் கூட பெயரை மாற்றியுள்ளார். அதனால் பெயர் மாற்றுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. மதுரை கோவில் நகரம் எனவே தமிழ்நாடு முதல்வர் பெரியார் பெயரை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் ஒரு அரசியல் அகதி, அவர் எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், காங்கிரஸ் கட்சி அவரை புறம் தள்ளி விட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை கூட காங்கிரஸ் கட்சி மறந்து விட்டது. ஆனால் அவர் தன்னுடைய இருப்பை காண்பிப்பதற்காக நேற்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை கடுமையாக பேசியுள்ளார்.

மதுரையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கால் வைக்க முடியாது என மதுரை மாநகர பாஜக சார்பில் சொல்கிறேன். ஜெய்பீம் பட விவகாரத்தில் கண்டனம் எழும் போது கூட சொன்னார்கள் நடிகர் சூர்யாவை ஏதோ பண்ணினால் ஒரு லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டார்கள், அதை நான் பண்ண வேண்டுமா என்று கூட ஈவிகேஎஸ் இளங்கோவன் நக்கலாக கேட்டார் .

இதுவே நாங்களும் சொல்லலாம், ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் இறங்கினால் அதை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம் என மதுரை மாநகர பாஜக சார்பில் அறிவிக்கிறோம் என மதுரை பாஜக நகர் மாவட்ட தலைவர் DR சரவணன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.