தமிழக முளுவதும் அனைவருக்கும் 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்.! தமிழக அரசு அறிவிப்பு.!

0
Follow on Google News

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்தியாவில் சில மாநிலங்களில் தற்பொழுது கொரோனா நோய்த் தொற்று பன்மடங்கு அதிகரித்து வருவதுபோல் தமிழ்நாட்டில் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் அரசு பன்முக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் கொரோனா நோயின் தற்பொழுதுள்ள நிலை பற்றியும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றின் நிலைமை மற்றும் அரசு எடுத்து வரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக –• RT-PCR பரிசோதனைகள் நாளொன்றுக்கு 50,000 என்ற அளவிலிருந்து தற்போது 75,000 என்று பரிசோதனைகள் பரவலாகவும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவில் 100 விழுக்காடு RT-PCR பரிசோதனைகள் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் மத்திய அரசின் பரிந்துரையின்படி மொத்த கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைகளில் குறைந்தபட்சம் 70 விழுக்காடாவது RT-PCR பரிசோதனைகள் இருக்க வேண்டும்.


• நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்களை உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்து நோய்த் தொற்று இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

• ஏதேனும் ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு / குடியிருப்புகளில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த வீடு அல்லது அந்த பகுதி நோய்த் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


• பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவைகளை மீறியதற்காக மார்ச் 16-ந்தேதி முதல் இதுவரை 45,250 நபர்களுக்கு 97.80 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

• நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிராணவாயு கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


• தடுப்பூசி பொறுத்தவரை, தமிழகத்தில் இதுவரை சுமார் 23 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 1.2 லட்சத்திற்கு குறையாமால் தடுப்பூசி போடப்படுகிறது. 22.3.2021 அன்று 1.52 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

• தமிழ்நாட்டில் 3,200-க்கும் மேற்பட்ட நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மருத்துவ வல்லுநர் குழு கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அவர்கள் கூறியதாவது:-


* தற்போது மக்களிடையே கோவிட் தொய்வு காணப்படுகிறது என்றும் இதனால் அவர்களிடையே பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் கோவிட் தவிர்க்கும் பழக்கங்கள் பின்பற்றுவது முற்றிலும் குறைந்துள்ளது. இதுவே கோவிட் மீண்டும் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் என்றும் அவர்களிடம் கோவிட் தொற்று ஏற்படும்போது அவர்கள் வசிக்கும் இடத்திலோ இல்லையெனில் பணி செய்யும் இடத்தில் கூட்டு தொற்று உருவாக்க வழிவகை செய்கிறது.


* மேலும், இந்த நுண்கிருமியை பொறுத்தவரை அவ்வப்பொழுது உலகளவில் மற்றும் இந்தியளவில் உருமாற்றங்கள் ஏற்படுவதால் அதைக் கண்டறிய ஒரு சில மாதிரிகளை குறிப்பாக கூட்டு தொற்று ஏற்பட்ட இடங்களிலிருந்து கூடுதலாக மரபியல் ரீதியாக ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள்.
* அதே வேளையில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் நுண்கிருமியில் அவ்வப்பொழுது மாற்றங்கள் ஏற்பட்டால் கூட தடுப்பு மற்றும் சிகிச்சையைப் பொறுத்தவரை இந்த நோயை அணுகுவதில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆகையால், ஏற்கனவே பரிந்துரைத்த பொது சுகாதார வழிமுறைகளை இன்னும் தீவிரமாக செயல்படுத்தவும் மற்றும் தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தினார்கள்.
* நோய்த் தடுப்பு பொறுத்தவரை முகக்கவசம் கட்டாயம் அணிவது, அனுமதித்த பணிகளை பாதிப்பின்றி தொடர வேண்டும் என்றால் அதற்கென வகுக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை கண்காணிக்கவும் பரிந்துரைத்தார்கள்.
* தடுப்பூசி பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட நபர்களில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இன்னும் வேகமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இஎன்று அறிவுறுத்தினார்கள்.விரிவான விவாதத்திற்கு பிறகு கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன:


* ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள இணையவழி / டிஜிட்டல் வகுப்புகளுக்கான ஆணைகளைத் தொடர்ந்து மருத்துவம், செவிலியம், விவசாயம், கால்நடை, சட்டம் மற்றும் இதர படிப்புகளை பொறுத்தமட்டில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தவிர இறுதி ஆண்டிற்கு முன் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி முறையில் வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஏதேனும் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் நிலையான வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த பல்கலைக்கழகங்களின் முடிவிற்கு ஏற்ப 31.3.2021-க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும்.
* ஏற்கனவே உள்ள அரசாணையில் உள்ளவாறு உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து நிகழ்ச்சிகள்/ கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதனை உறுதி செய்யத் தவறினாலோ அல்லது மீறினாலோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் உள்ளரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூட்டங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், இதனை அக்கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
* தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கணினி சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் 100 விழுக்காடு தொழிலாளர்கள் / அலுவலர்கள் வகுக்கப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட வயதுவரம்பிற்கு ஏற்றவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர ஊக்குவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
* பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனை பொதுப் போக்குவரத்து நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
* வணிக வளாகங்களில் உள்ள உணவுக் கூடங்கள், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தளர்வின்றி பின்பற்ற வேண்டும். இந்த தொற்று அதிகரித்து வரும் வேளையில் இதில் ஏதேனும் விதி மீறல்கள் காணப்பட்டால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்பதை இதை செயல்படுத்துபவர்கள் மற்றும் பயன்படுத்தும் பொதுமக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.
* மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், தொழிற்சாலைகள், கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப் படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்காக அந்த பகுதிகளில் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் RT-PCR பரிசோதனைகளுக்கு மாதிரி எடுக்கும் “நடமாடும் மாதிரி சேகரிக்கும் மையங்கள்” அமைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது.
* மாவட்டங்களில் “கோவிட் கவனிப்பு மையங்கள்” அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
* கோவிட்-19 தடுப்பூசி குறித்துள்ள தேசிய வல்லுநர் குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இருந்து மாநிலத்தை சார்ந்த கருத்துகளை அந்தக்கூட்டத்தில் எடுத்துரைக்கிறது. கூடுதலாக தேசிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டை மையப்படுத்தி கோவிட் தடுப்பூசிக்கான வழிமுறைகளை வகுத்து, இலக்கு நோக்கி தடுப்பூசி போடுவதற்கான கூடுதல் வழிமுறைகளை உருவாக்க ஒரு வல்லுநர் குழுவை ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள்/மாநகரங்கள் மற்றும் பகுதிகளில் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த இந்த வல்லுநர் குழு வழிவகுக்கும்.
* தற்பொழுது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வயதுவரம்பின்றியும், 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மற்றும் 45 வயதிலிருந்து 59 வயது வரை உள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மத்திய அரசு NEGVACன் பரிந்துரைப்படி, முன்னிலை பட்டியலில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் சேர்க்கலாம் என்றும் அவர்களுக்கு 1.4.2021 முதல் தடுப்பூசி போடலாம் என்றும் முடிவெடுத்து, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. இந்த முடிவினால் 1.4.2021 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.              

இக்கூட்டத்தின் முடிவில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்ளாட்சி, காவல் மற்றும் இதரத் துறைகள், பெருநகர சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கோவிட் தொற்றினை கட்டுப்படுத்த பணியாற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கினார். மேலும் மூத்த அதிகாரிகள் குழுவாக செயல்பட்டு நோய்த் தொற்று மற்றும் நோய் தொற்றின் போக்கை கண்காணிக்கவும், மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு தனது ஆய்வறிக்கையை தலைமைச் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

கொரோனா நிலைமையை சமாளிக்கவும், நோய்த் தொற்று பரவாமலும், பன்மடங்கு அதிகரிப்பதை தடுக்கவும் தேவையான வழிவகையை உருவாக்கவும் இக்குழு செயல்படும்.மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த நோய்த் தொற்று அதிகரித்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால், தாக்கம் குறைந்து வரும் சூழ்நிலையை உருவாக்க கோவிட் தடுப்பு நெறிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது.

பொது இடங்களில் மக்களிடத்திலும் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களிலும் முகக்கவசம் அணியாதது மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றாதது ஆகிய சூழ்நிலைகள் தொடர்ந்தால் நமது மாநிலத்திலும் நோய்த் தொற்று தாக்கத்தின் அளவு உயரக்கூடிய நிலை உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து இதனைத் தவிர்க்க, கோவிட் சார்ந்த பழக்கங்களான முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை தாமாக முன்வந்து பின்பற்றுவதே இதற்கான தீர்வாகும்.மேலும் நோய் தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.