தமிழக அரசியல் களத்தில் தேசிய கட்சிகளின் வியூகங்களும், மாநிலக் கட்சிகளின் நகர்வுகளும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், அரசியல் சூழலில் ஏற்படும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தாக்கங்களை ஆய்வு செய்யும் வகையில் நடத்தப்பட்டதாக கூறப்படும் சில ரகசிய சர்வேக்கள் தொடர்பான தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ளன.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு காங்கிரஸ் தரப்பில் எந்த அளவுக்கு சவால் உள்ளது என்பதுடன், தமிழகத்தில் உருவாகி வரும் புதிய அரசியல் மாற்றங்கள் குறித்தும் இந்த ஆய்வுகளில் முக்கியமாக கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பாஜக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ரகசிய சர்வே அறிக்கையின்படி,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியால் தற்போதைய சூழலில் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு நேரடியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் மோடியின் செல்வாக்கும், பாஜகவின் வலுவான கட்சி கட்டமைப்பும் தொடர்ந்து இருப்பதால், ராகுல் காந்தியின் தனிப்பட்ட அரசியல் நகர்வுகள் மட்டும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே இந்த ஆய்வின் முக்கிய முடிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், அதே ரகசிய சர்வே யில் தமிழக அரசியல் தொடர்பான தகவல் தான் தற்போது தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சியும், அவரது கட்சியின் அடுத்தடுத்த நகர்வுகளும் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று டெல்லி பாஜகவுக்கு அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ராகுல் காந்தியும் விஜய்யும் எதிர்காலத்தில் கைகோர்க்கும் சூழல் உருவானாலோ அல்லது அரசியல் ரீதியாக இவர்களது கூட்டணி ஒருங்கிணைந்தாலோ, அது தேசிய அளவில் பாஜகவிற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த சர்வே எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், விஜய்யின் மிகப்பெரிய பலமாக அவரது அடிமட்ட தொண்டர் படை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவரது டிஜிட்டல் ஆதரவாளர்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து சமூக வலைதளங்களில் செயல்படும் அவரது விர்ச்சுவல் வாரியர்ஸ் பட்டாளமும்,
ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பும் எதிர்கால தேர்தல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற இளைஞர்களை மையப்படுத்திய டிஜிட்டல் அரசியல் கட்டமைப்பு பாஜகவிடம் முழுமையாக இல்லை என்ற கருத்தும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், விஜய்யை அடக்குமுறை மூலமாகவோ அல்லது வழக்கமான அரசியல் தந்திரங்களை பயன்படுத்தியோ எதிர்கொள்ள முயற்சி செய்தால், அது எதிர்பார்த்ததற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த ரகசிய சர்வே எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதுபோன்ற நடவடிக்கைகள் தவறான அரசியல் சமிக்ஞையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால்,
விஜய்யை எதிர்கொள்ளும் விஷயத்தில் மிகவும் கவனமாகவும், சாதுரியமாகவும் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மேலிடத்திற்கு இந்த ரகசிய சர்வே ரிப்போர்ட் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

