ஐ.பெரியசாமியை மூலையில் உட்கார வைத்த உதயநிதி.! எடப்பாடி பழனிசாமி வேதனை.!

0
Follow on Google News

தந்திரமாக மக்களை ஏமாற்றுவதில் முதன்மையானவர்கள் திமுகவினர். அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் நம்பர் ஒன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவெறும்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கூறி உள்ளார்.மேலும் அவர் பேசுகையில், திருச்சி மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதி, விவசாயிகள் நிறைந்த பகுதி. நீங்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளேன். இதற்கான டோக்கன் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல் அனைவருக்கும் ரூ.2500, அதோடு ஒரு முழுக்கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அதைக்கூட ஸ்டாலின் நிறுத்த பார்க்கிறார். உங்களின் துணையோடு அந்த சதி திட்டமும் முறியடிக்கப்படும்.

காவேரி நதிநீர் பிரச்சினையில் அம்மா அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு அம்மாவின் அரசும் சட்டப் போராட்டம் நடத்தி தற்போது வெற்றி கண்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நான் அறிவித்துள்ளேன். ஆனால் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின் தான். அதை தடுத்து நிறுத்தியது அம்மாவின் அரசு. செய்தது எல்லாம் அவர்கள், பழியை நம்மீது போடுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் மற்றும் திமுகவினரால் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் எங்கே போனது, உரிய அரசு அதிகாரிகளிடம் சேர்த்தார்களா, இல்லையே. மக்களை ஏமாற்றுவற்காக இதுபோன்ற நடவடிக்கைளில் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் பிறகு எல்லோரும் நம்முடன் என்று ஒரு அமைப்பை நடத்தினார்கள். அதில் திமுகவினர் வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு, அவர்களின் விருப்பம் இல்லாமலே எல்லோருடைய பெயரையும் இணையதளத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொடுத்த ஒரே அரசு, இந்தியாவிலேயே எங்களுடைய அரசு தான். ஆனால் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு உதவுவது போல நடித்து வந்தார். தந்திரமாக மக்களை ஏமாற்றுவதில் முதன்மையானவர்கள் திமுகவினர். அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் நம்பர் ஒன். நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசி, நேரத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்வார். ஒரு பச்சோந்தியை போல. மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று வெற்றி பெற்று விட்டால் மக்களை மறந்து விடுவார். குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பார். இது ஒரு குடும்ப கட்சி. அவர்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் தான் உயர்பதவிக்கு வர முடியும்.

நான் தொலைக்காட்சி மூலமாக உதயநிதி திண்டுக்கல்லில் மனு வாங்கும் நிகழ்ச்சியை பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் ஐ.பெரியசாமியை ஓரத்தில் ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டார்கள். உதயநிதியின் வயது அவருடைய அனுபவம். அப்படிப்பட்டவரையே மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள். திமுகவில் வாரிசு அரசியல் மட்டும் அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது. அதை ஒரு கட்சி என்று அழைப்பதை விட கார்ப்பரேட் கம்பெனி என்று அழைப்பது சரியாக இருக்கும். இப்படிப்பட்ட கம்பெனி தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரலாமா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.