மனசாட்சியற்ற தலைவர்களால் எனது இரத்தம் கொதிக்கிறது…. யுத்தத்தை தொடர்வேன்.! தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கொந்தளித்த ஜோதிமணி.!

0
Follow on Google News

திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த 25 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி திமுகவிடம் இருந்து பெறுவதற்கு கடுமையாக போராடியது, ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகும் சூழல் கூட உருவாகியது, அந்த அளவுக்கு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்தது, ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதார் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி.

இந்நிலையில் போராடி பெற்ற 25 தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடே கடும் போட்டி நிலவி வருகிறது, இதில் கட்சிக்காக விசுவாசமாக இருப்பவர்கள், கட்சிக்காக நீண்ட வருடம் உழைத்தவர்களுக்கு சீட் வழங்கமால் பணத்தை பெற்று கொண்டு காங்கிரஸ் தலைமை சீட் வழங்குவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, இது குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைமை கடுமையாக சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது,காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை. எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள்.

நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.