அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது.! கி.வீரமணி ஆவேசம்.!

0
Follow on Google News

திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்தது, இதற்கு திமுக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், திராவிட கழக தலைவர் கி.வீரமணி அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துளதாவது.

வருமான வரித்துறையை ஏவிவிடுவது , வன்மையான கண்டனத்திற்குரியது, தி.மு.க.விற்கு இத்தேர்தலில் வெற்றி உறுதி – அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியிலும் உறுதியாகும் நிலை, பா.ஜ.க-அ.தி.மு.க.வின் ஒரே ஆயுதமான வருமான வரித் துறை சோதனை என்ற அச்சுறுத்தலை – தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் திருமதி செந்தாமரை சபரீசன் இல்லம் மற்றும் சில தி.மு.க. வேட்பாளர்களைக் குறி வைத்து இன்று (2.4.2021) வருமான வரித்துறையினரை ஏவிவிட்டுள்ளனர்.

இதன் உண்மை நிலையை வாக்காளப் பெருமக்களாகிய பொதுமக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். இந்த அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வீசும் ஆழிப்பேரலையை ஒருபோதும் தடுத்துவிட முடியாது. முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட அ.தி.மு.க. அமைச்சரின் டைரி, அதில் இருந்த குறிப்புகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இப்பொழுதும் ஆங்காங்கே அ.தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்குறித்து செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. வருமான வரித் துறையை ஏவிவிடும் நடவடிக்கைகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உரம் போடுவதாகுமே தவிர, அவர்களது வெற்றியை ஒருபோதும் தடுக்காது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது, இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வீரமணி தெரிவித்துள்ளார்.