இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். நஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதுதான். முதல் பாகத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்பதால் இரண்டாம் பாகத்தில் படத்தினை எங்கிருந்து தொடங்கப்போகின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது.

ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளார் இயக்குநர். அதேபோல் 2015ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகின்றது. தங்கலான் படத்துக்கு போட்டியாக வெளிவந்த இப்படத்துக்கு முதல் நாளில் கம்மியான தியேட்டர்களே கிடைத்தன. ஆனாலும் படம் பட்டாசாய் இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளதால், இரண்டாம் நாளில் இருந்து அப்படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் டிமாண்டி காலனி 2 திரைப்படம் தரமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்று சொன்னால், முந்தைய பாகத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், புதிய கதையை படமாக எடுத்து வைப்பார்கள். பேய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, கதை சற்று வேறுபட்டு இருந்தாலும் பழிவாங்கும் படலம் மட்டும் மாறவே மாறாது. டிமான்டி காலனி 2 படத்தை பொறுத்தவரை, பழைய டெம்ப்ளேட் பின்பற்றப்படவில்லை, அதுதான் ப்ளஸ்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்ரீனிவாசன் இறக்காமல் இருப்பதே இந்த பாகத்திற்கான ஓபனிங். அவரை யார் காப்பாற்றினார்கள் ? , எதற்காக காப்பாற்றினார்கள் ? , டிமான்டிக்கும் முதல் பாகத்தில் வந்த செயினிற்கும் என்ன ஆனது என்பதையே இரண்டாம் பாகமாக விவரித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் ஹீரோ அருள்நிதி, கதைக்கு தேவையான அளவு நடித்துள்ளார். முத்துக்குமார், அருண் பாண்டியன், செரிங் டோர்ஜி ஆகியோர் தங்களது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளனர். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அசத்தியுள்ளார். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படம் கண்டிப்பாக எல்லா வயது ரசிகர்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் சொல்ல வந்த கதையை ரசிகர்களுக்கு தெளிவாக கூறியுள்ளார். அதாவது 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனை தான் இப்போது நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணமாகவும், அதை மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்து அனைத்தும் காட்சிகளிலும் முதல் பாகத்தைப் போலவே நம்மை படம் பார்க்கும்போது சீட்டின் முனையில் இயக்குனர் உட்கார வைக்கிறார்.
மற்றபடி மைனஸ் என்றால் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சரியில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. முதல் பாகத்தை போல் இந்த பாகமும் நம் மனதில் பல்வேறு கேள்விகளை விட்டு செல்கிறது. அதற்கான பதில் அடுத்த பாகத்தில் கிடைக்கும் என்பதையும் படத்தின் க்ளைமாக்ஸில் காட்டிவிட்டு படத்தை முடித்துவிட்டனர். தொடர் விடுமுறை நாளில் வெளியாகியுள்ள இந்த ஹாரர் திரில்லர் படம் அனைத்து வகையான ரசிகர்களையும் நிச்சயம் ஈர்க்கும். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் யார் வேண்டுமானலும் படத்தை பார்க்கலாம்.அந்த வகையில் சுதந்திர தினத்தில் வெளியான பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலானை அருள்நிதி நடித்த Demonte Colony 2 மண்ணை கவ்வ வைத்துள்ளது.

