நீதிமன்ற எச்சரிக்கை..! அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு.! பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாகுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்துக்கு திரையரங்குகளில் 100 சதவிகிதம் இருக்ககைகள் அனுமதிக்க முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் நடிகர் விஜய், இதனை தொடர்ந்து, வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளின் இருக்கைகளை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்திக் கொள்ளும் உத்தரவை தமிழக அரசு கடந்த 4-ஆம் தேதியன்று பிறப்பித்துள்ளது.

இது, திரையரங்கு தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுகளை நீா்த்துப் போகச் செய்யும் செயலாக அமையும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்றைக்க்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் வரும் 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் மதுரை உயர் நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்தது.

உயர்நீதி மன்ற எச்சரிக்கையை தொடர்ந்து திரையரங்குகளில் 100 சதவிகிதம் இருக்ககைகள் அனுமதி வழங்கியதை திரும்ப பெற்றது தமிழக அரசு, இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில்,

திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு மாண்பமை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.இந்நிலையில் நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அந்தர் பல்டி அடித்துள்ளதால், 50 சதவிகித இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட்டால் மிக பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாகுமா அல்லது தேதி ஒத்திவைக்கப்படுமா என மாஸ்டர் படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.