இளையராஜா பற்றி அன்றே சொன்ன மனோபாலா… என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

மனோபாலா மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்து, அது பொது தளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இளையராஜாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது. மனோபாலா மறைவுக்கு வீடியோ மூலம் பேசி இரங்கல் தெரிவித்திருந்த இளையராஜா. அதில் அவர் பேசும்போது.

என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைந்திருந்த நண்பர் நடிகர், டைரக்டர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். என்னைப் பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பிரிட்ஜை தாண்டுகின்ற நேரத்தில் எத்தனை மணிக்கு என்னுடைய கார் பிரிட்ஜை தாண்டுகிறது என்ற நேரத்தை பார்த்து அதே நேரத்தில் என்னை காரில் பார்ப்பதற்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோபாலாவும் ஒருவர்.

அப்படியே இருந்தாலும் பின் நாட்களில் நடிகரானாலும் என்னிடம் வந்து அப்போதைக்கு அப்போது நடந்த விஷயங்களை எல்லாம் சொல்வார். சினிமா உலகத்தில் அதிகமாக என்னுடைய ரெக்கார்டிங் டைமில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர் மனோபாலா என இளையராஜா பேசிய அந்த வீடியோவில்,

”என்னை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பிரிட்ஜை தாண்டுகின்ற நேரத்தில், அந்த நேரத்தை சரியாக கணித்து என்னை காரில் சந்திக்க காத்திருந்த பல இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர் என்கிற அந்த ஒரு வார்த்தையை வைத்து இளையராஜாவின் ஆணவத்தை பாரீர், ஒருவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதில் கூட ஆணவத்துடன் பேசுவதா என இளையராஜா மீது வன்மத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இது தான் சமயம் என வரம்பு மீறி விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

இப்படி ஒருபக்கம் இளையராஜா மீது ஒரு பக்கம் வசைபாடி கொண்டிருக்கையில், இளையராஜா குறித்து மனோபாலா உயிருடன் இருக்கும் போது பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, அதில் மனோபாலா பேசுகையில், 80களில் என்னை போன்ற பல இளைஞர்கள், இயக்குனர் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நிலையில் அப்போது எங்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்த ஒரே ஒருவர் இளையராஜா தான்.

எங்களுடைய படத்தில் இசைஞானி இளையராஜா என்று பெயரை போட்டு விட்டால் மட்டுமே போதும், எங்களுடைய பெயர் பின்னால போட்டால், என்ன முன்னாடி போட்டால் என்ன எங்களுடைய வாழ்க்கையை சுபிட்சமாக மாறிவிடும். நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கின்றோம் என்றால் எங்களுக்கு ஒவ்வொரு செங்கலாக அடுக்கி வச்சு எங்கள் வாழ்க்கையில் மிகப் பிரகாசமாக ஒளிரச் செய்தவர் அந்த மகான் இளையராஜா தான்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் டிஸ்கஷன் செய்யும் போது இந்த இடத்தில் எப்படி இளையராஜாவின் இசை இருக்கும், இதற்கு எப்படி பாடல் போடுவார் என்று இளையராஜாவை மனதில் வைத்து தான் ஆலோசனை நடத்துவோம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இளையராஜா என்கின்ற ஒரு மனிதனை ஒதுக்கி விட்டு எங்களுடைய வாழ்க்கை அமைந்ததாக சரித்திரமே கிடையாது என்பதை நான் உறுதியாக சொல்லுவேன் என மனோபாலா உயிருடன் இருக்கும் போது பேசிய வீடியோ தற்பொழுது இளையராஜாவை வசைபாடி வருகின்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.